மணல் அள்ளும் அனுமதியை தனியாருக்கு வழங்க கூடாது: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை; ராமநாதபுரம் மாவட்டம் உப்புக்கோட்டையைச் சேர்ந்த சமாதானம் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் திருவாடானை வட்டத்துக்கு உட்பட்ட ஓரியூர் கிராமத்தில், பாம்பார் ஆறு உள்ளது. பாம்பார் ஆற்றில் 2.10 ஹெக்டேர் பரப்பில், 31,322 கனமீட்டருக்குஆற்று மணல் எடுக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை மீறி ஆற்றில் 104 ஹெக்டேர் பரப்பளவில் ஆற்றுமணல் அள்ளப்பட்டுள்ளது. தினமும் ராட்சத மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்டலாரிகளில் வணிக நோக்கில் ஆற்று மணல் எடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை வளங்கள் மற்றும் கனிமவளங்களைப் பாதுக்காக்க பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றங்களும் அவ்வப்போது பல உத்தரவுகளை பிறப்பிக்கின்றன. இதை அதிகாரிகள் பின்பற்றாமல், மணல் கடத்தலுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். மணல் குவாரிகளைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்நிலைக் குழு அமைக்கவும், பாம்பார் ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, "மனுதாரர் குறிப்பிடும் குவாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூடப்பட்டுவிட்டது" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், "2013-ல் மணல் குவாரிகளை தனியார் நடத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டது. தற்போது மணல் குவாரிகளை அரசு மட்டுமே நடத்தி வருகிறது.

மணல் குவாரிக்கு அனுமதி வழங்கும் முன்பு, சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மணலை எடுக்க ஒப்பந்தப் பணி என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குகின்றனர். இது அரசின் கனிமவளச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, குவாரிகளில் மணல் அள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அனுமதி வழங்கக் கூடாது. மனு முடிக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in