வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்திய விவகாரத்தில் அரசு சுற்றறிக்கை ரத்து; தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும்: 2017-ம் ஆண்டு மதிப்பீட்டை அமல்படுத்த உத்தரவு

வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்திய விவகாரத்தில் அரசு சுற்றறிக்கை ரத்து; தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும்: 2017-ம் ஆண்டு மதிப்பீட்டை அமல்படுத்த உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மீண்டும் 2017-ம் ஆண்டு வழிகாட்டி மதிப்பீட்டையே அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்ய பத்திரப்பதிவுத் துறைத் தலைவர் தலைமையில் மாநில அளவில் வழிகாட்டி மதிப்பீட்டுக்குழு செயல்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2012-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதி்ப்பு கடந்த 2017-ம் ஆண்டு 33 சதவீதம் குறைக்கப்பட்டு மறு நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சொத்துக்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த வழிகாட்டி மதிப்பை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. எனவே தமிழக அரசின் குழு புதிய வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயம் செய்ய காலஅவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால் அதுவரை 2012-ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும் என கடந்தாண்டு மார்ச் 30 அன்று சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கிரெடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வழிகாட்டி மதிப்பை உயர்த்த சட்ட விதிகளின்படி துணைக்குழுக்கள் அமைத்து, அறிக்கைகள் பெற்று, ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டபிறகே முடிவு செய்ய முடியும் என்ற சட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் தமிழக அரசு பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.எஸ்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக கடந்தாண்டு மார்ச் மாதம் தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தனர்.

மேலும், உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி புதிதாக வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றியமைக்கும் வரை, கடந்த 2017-ம் ஆண்டில் அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதேநேரம் 2023 மார்ச் மாதத்துக்குப்பிறகு தற்போது வரை பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும், ஆகவே அதற்கான முத்திரைத்தாள் கட்டணத்தை திருப்பி அளிக்கும்படி யாரும் உரிமை கோர முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in