சமூக வலைதளங்களில் அவதூறு: பாஜக பெண் நிர்வாகி கைது

சவுதாமணி
சவுதாமணி
Updated on
1 min read

திருச்சி: திமுக அரசு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக பெண் பிரமுகரை திருச்சிதனிப்படை போலீஸார் சென்னையில் நேற்று கைது செய்தனர்.

திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஏ.கே.அருண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள சவுதாமணி, பள்ளிச் சிறுமிகள் மது குடிப்பது போன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, திராவிடமாடல் ஆட்சியில் மதுப்புழக்கம், போதைப்பொருள் புழக்கம் அதிகஅளவில் இருப்பதாக கூறியுள்ளார்.

குழந்தைகளை அச்சுறுத்தும் வகையிலும், தமிழக அரசு மீது அவதூறு பரப்பும் வகையிலும் பதிவிட்டசவுதாமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, சவுதாமணி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 504, 505, 153, தகவல் தொழில்நுட்பம் சட்டம் பிரிவு 66இ, சிறார் நீதி சட்டம் பிரிவு 74, 77 ஆகிய பிரிவுகளில் திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, சென்னையில் இருந்த சவுதாமணியை தனிப்படைபோலீஸார் நேற்று கைது செய்து,திருச்சிக்கு அழைத்து வந்தனர். திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 5-ல் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிபாலாஜி, புகார் மீது எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறி, நீதிமன்றக் காவலுக்கு மறுத்து, சவுதாமணியை பிணையில் விடுவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in