Published : 11 Feb 2018 07:43 PM
Last Updated : 11 Feb 2018 07:43 PM

கொழும்பு மாநாகராட்சி தொடங்கப்பட்ட 152 ஆண்டுகளில் முதல் பெண் மேயராக ரோசி சேனாநாயக்க தேர்வு

இலங்கையில் கொழும்பு மாநகராட்சி தொடங்கி 152 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் முறையாக பெண் மேயராக முன்னாள் திருமதி உலக அழகியான ரோசி சேனாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் தலைநகரான கொழும்புவை நிர்வகிக்க அதன் மாநகர சபை 16.01.1886 அன்று உருவாக்கப்பட்டது. கொழும்பு மாநகர முதல்வராக (Chairmen) சி.பி. லெயாட் என்ற ஆங்கிலேயர் பணியமர்த்தப்பட்டு 1866-1877 ஆண்டு வரையிலும் பதவியிலிருந்தார். அதன் பின்னர் 1935 ஆம் ஆண்டு வரையிலும் 33 கொழும்பு மாநகர முதல்வராக ஆங்கிலேயர்களே பதவியில் அமர்த்தப்பட்டனர்.

1937-ம் ஆண்டு கொழும்பில் மாநகராட்சியின் முதல் மேயர் தேர்வு செய்யப்பட்டார். அதுவும் ஆங்கிலேயர் அல்லாதவராகவும் முதல் தமிழ் மேயராக டாக்டர் ஆர்.சரவணமுத்து தேர்வு செய்யப்பட்டார். 1952-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆயிஷா ரவூப் என்ற பெண்மணி கொழும்பு மாநகராட்சியின் முதல் துணை மேயரானார்.

கொழும்பு தனி அரசியலமைப்புக் கொண்ட மாநகராட்சியாகும். மேயரும் மாநகர மன்ற உறுப்பினர்களும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநகராட்சித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கொழும்பு மாநகராட்சி தேர்தலுக்கு 66 உறுப்பினர்கள் வட்டார அடிப்படையிலும், 44 உறுப்பினர்கள் விகிதாச்சார அடிப்படையில் என மொத்தமாக 110 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 27 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கொழும்பு மாநகராட்சி தேர்தலைப் பொருத்தவரை கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவான கட்சியே ஆட்சி செய்து வந்துள்ளன. இம்முறை கொழும்பு மாநகராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக மேயர் பதவி வேட்பாளருக்காக முன்னாள் திருமதி உலக அழகியும் (mrs world), முன்னாள் அமைச்சருமான ரோசி சேனாநாயக்கவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் கொழும்பு மாநகராட்சியை ஐக்கிய தேசியக் கட்சி 1,31,353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் கொழும்பு மாநகராட்சி தொடங்கி 152 ஆண்டுகள் வரலாற்றில் முதல் முறையாக பெண் மேயராக ரோசி சேனாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரோசி சேனாநாயக்கவை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 60,087 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31,421 வாக்குகளும், மக்கள் விடுதலை முன்னணி 14,234 வாக்குகளும் பெற்றன.

உலகிற்கு முதல் பெண் பிரதமரான சிரிமாவோ பண்டார நாயகேவை 20.07.1960-ல் வழங்கிய இலங்கைக்கு அதன் தலைநகரான கொழும்பு மாநகராட்சியில் முதல் மேயராக பெண் தேர்வு செய்யப்படுவதற்கு 152 ஆண்டுகள் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x