

சென்னை: ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக்கின் சகோதரர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
இதில், தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூளையாகச் செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக் என்பது தெரிந்தது.
இதையடுத்து, அவரை விசாரிக்க முயன்றபோது தலைமறைவானார். அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.
ஜாபர் சாதிக் சகோதரர் விசிகவில் இருந்து நீக்கம்: இந்த ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஜாபர் சாதிக் உடன் தலைமறைவாக உள்ள அவரது சகோதரர் முகமது சலீம் என்பவரும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளனர்.
முகமது சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் செயல்பட்டு வந்துள்ளார். போதைப்பொருள் வழக்கால் தற்போது ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விசிக விடுத்துள்ள அறிக்கையில், “கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் முகமது சலீம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருடன் யாரும் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.