

பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர் பாஜக கூட்டணியில் சேர்க்கவில்லை என்று செய்திகள் பரவியது.
இந்நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் நிலையான ஆட்சி தரக்கூடிய வாய்ப்பு பிரதமர் மோடிக்கும், அவர் சார்ந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்தான் இருக்கிறது. எனவே நாட்டின் நலன் கருதி, நிலையான ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பன்னீர்செல்வம் இல்லை என இதுவரை பாஜக அறிவிக்கவில்லை. பாஜக மாநிலத் தலைவர் மற்றும் மேலிட தலை வர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். இன்றைக்கும் பேசியிருக்கிறோம். தமிழகம் வந்த மோடி, எங்களை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் ஒரே குடும்பத்துக்குள் இருக்கிறோம்.
பாஜக தேசிய கட்சி. தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி. எங்கள் அணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும். தேர்தலே அறிவிக்காத நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அவசியம் ஏற்படவில்லை. டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்றுவதற்கான காலம் கனிந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.