Published : 01 Aug 2014 12:41 PM
Last Updated : 01 Aug 2014 12:41 PM
சென்னையில் இரண்டு புதிய தொழிற்பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் கண்டறியப்படும் என்று மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடந்தது. அதில் பேசிய 76வது வட்ட மாமன்ற உறுப்பினர் எம்.சரோஜா, மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு, சென்னையில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி மையம் மாணவர்களின் தேவைக்கு போதாது என்றும், மேலும் இரண்டு மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:
தற்போது மத்திய வட்டாரத்தில் ஒரு தொழிற்பயிற்சி மையம் உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு வட்டாரங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இந்த மையம் தூரமாக இருப்பதாலும், தொழிற்பயிற்சி படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் அந்தந்த வட்டாரத்திலேயே ஒரு தொழிற்பயிற்சி மையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் கண்டறியப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய வட்டாரத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் புதிதாக இரண்டு பாடப் பிரிவுகள் தொடங்க தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி துறையிடம் அனுமதி கோரவும் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT