“இடமாறுதலை தண்டனையாக கருதக் கூடாது” - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

“இடமாறுதலை தண்டனையாக கருதக் கூடாது” - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

மதுரை: “இடமாறுதலை தண்டனையாக கருதாமல், பணி சேவையின் ஓர் அங்கமாக கருத வேண்டும்” என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த ஜோசப், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் 25 ஆண்டுகளாக ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். சில மாதங்களுக்கு முன்பு என்னை மதுரை கிளையிலிருந்து திருப்புவனம் கிளைக்கு இடமாறுதல் செய்தனர். என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் என்னை இடமாறுதல் செய்துள்ளனர்.

திருப்புவனம் கிளையில் எந்த அடிப்படை வசதியும் கிடையாது. எனவே எனது பணியிடமாறுதலை ரத்து செய்து மீண்டும் மதுரை கிளைக்கு மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து ஜோசப் மேல்முறையீடு செய்தார். இதனை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, ஜி.இளங்கோவன் விசாரித்தனர். பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, “அரசு ஊழியர்கள் இடமாற்றத்தை தண்டனையாக கருதக்கூடாது. அதனை அரசு பணியின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.

அதேபோல் அனைத்து ஊழியர்களுக்கும் பணிபுரியும் இடங்களில் தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். மனுதாரர் இடமாறுதல் செய்யப்பட்ட இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தால் அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம்” என உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in