Last Updated : 28 Feb, 2024 08:08 PM

2  

Published : 28 Feb 2024 08:08 PM
Last Updated : 28 Feb 2024 08:08 PM

மக்களுடன் நின்றிருந்த மதுரை ஆதீனத்தை காரை நிறுத்தி சந்தித்த பிரதமர் மோடி!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்தை முடித்து திரும்பிய பிரதமர் மோடி, மக்களுடன் நின்றிருந்த மதுரை ஆதீனத்தை பார்த்ததும் காரை நிறுத்தி அருகே அழைத்து பேசினார்.

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று மதியம் மதுரை வந்தார். மதுரை வீரபாஞ்சானில் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்கள் மாநாட்டில் பங்கேற்ற பின் இரவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார் பிரதமர். கோயிலில் பிரதமரை அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். கோயில் சார்பில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மீனாட்சியம்மன், சுவாமி சன்னதியில் வழிபட்ட பிரதமர் பெற்றாமரை குளத்தை பார்வையிட்டார்.

மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்தை முடித்துக் கொண்டு பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு தெற்காவணி மூல வீதி வழியாக பிரதமர் சென்றார். பிரதமரை பார்க்க தெற்காவணி மூல வீதியின் இரு பக்கத்திலும் மக்கள் காத்திருந்தனர். மக்களுடன் மக்களாக மதுரை ஆதீன மட வாசலில் மதுரை ஆதீனமும் நின்று கொண்டிருந்தார்.

மடத்தின் முன்பு மதுரை ஆதீனம் நிற்பதை காரில் இருந்து கவனித்த பிரதமர், உடனடியாக காரை நிறுத்தச் சொன்னார். பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஆதீனத்தை அழைத்து வருமாறு கூறினார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆதீனத்தை பிரதமர் கார் அருகே அழைத்து வந்தனர். காரில் இருந்த பிரதமருக்கு மதுரை ஆதீனம் சால்வை அணிவித்தார். இருவரும் நலம் விசாரித்தனர். பின்னர் பிரதமர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பிரதமருடான சந்திப்பு குறித்து மதுரை ஆதீனம் இன்று கூறியது: “மீனாட்சியம்மன் கோயில் தரிசனத்தை முடித்துவிட்டு வரும் போது பிரதமர் மோடியை நேரில் சந்தித்தேன். என்னை பார்த்ததும் ‘நல்லாயிருக்கீங்களா?’ என பிரதமர் கேட்டார். அவருக்கு பொன்னாடை அணிவித்தேன்.

பிரதமரிடம், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். கைது செய்யப்படுகின்றனர். அதற்கு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தான் காரணம். இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர். கச்சத்தீவை மீட்க வேண்டும் அய்யா என்றேன். இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும் அய்யா என்றும் கேட்டேன். அதற்கு பிரதமர் சரி என்று சொன்னார். பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

பிரதமர் மோடி உலகத் தலைவர்கள் வரிசையில் உள்ளார். அமெரிக்கா பிரதமருக்கு ரத்தின கம்பளம் விரித்தது. ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடினார். திருக்குறளை மோடியை தவிர வேறு எந்த பிரதமரும் இந்தளவு பேசியதில்லை. வேறு எந்த பிரதமர் இவ்வாறு செய்துள்ளார். தமிழின் பெருமையை உலகம் முழுக்க மோடி எடுத்துச் செவ்று வருகிறார். தமிழை பிரதமர் ஆதரிப்பதால் நாங்கள் அவரை ஆதரிக்கிறோம். 2024-ல் மீண்டும் பிரதமராக மோடியே வருவார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x