அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
Updated on
1 min read

சென்னை: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளேன்.

உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

மக்களவை தேர்தல் நெருங்குவதால், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் நான் அளித்த மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in