Published : 26 Feb 2024 05:54 AM
Last Updated : 26 Feb 2024 05:54 AM

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை திறந்தார் பிரதமர் மோடி

சென்னை: சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட276 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனை உட்பட தமிழகத்தில் மொத்தம் ரூ.313.60 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை பிரதமர்மோடி திறந்து வைத்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மத்திய அரசின் நிதியில் ‘தேசியமுதியோர் நல மையம்’ (மருத்துவமனை) கட்டுமானப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால், தேவையை கருதி தேசிய முதியோர் நல மருத்துவமனை, அரசு கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கரோனா மருத்துவமனைசெயல்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. பின்னர், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, காணொலி காட்சி மூலமாக,சென்னை கிண்டியில் ரூ.151.17கோடியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையம்,ஆய்வகத்தையும் திறந்து வைத்தார்.

மருத்துவமனை வளாகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தின் கட்டிடம் மத்தியஅரசு நிதியில் கட்டப்பட்டிருந்தாலும், தமிழக அரசின் நிதி பங்களிப்போடுதான் மருத்துவமனை தொடங்கப்படுகிறது. 40 தீவிர சிகிச்சை படுக்கைகள் உட்பட 200 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 5 அறுவை சிகிச்சை அரங்கம், 20 கட்டண வார்டுகள் உள்ளன. கட்டண அறையில் உணவுடன் சேர்த்து ரூ.900கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள முதியவர்களும்இந்த மருத்துவமனையின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மருத்துவமனை திறக்கப்படும்போதே மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 276 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவம் மட்டுமில்லாமல் முதுமையியல், முதியோர் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளும் இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்படஉள்ளன.

பல்வேறு சிகிச்சை பிரிவுகள்: புறநோயாளிகள் பிரிவு, அறிவுத்திறன் குறைபாடு சிகிச்சை, எலும்பு தன்மையை உறுதிப்படுத்த சிகிச்சை, எலும்பு தேய்மானம் சிகிச்சை, சிறுநீர் கட்டுப்படுத்த முடியாத முதியவர்களுக்கு சிகிச்சை,நாள்பட்ட வலி மற்றும் பிரச்சினைகளுக்கான சிகிச்சை, இதயமருத்துவம், சிறுநீரக மருத்துவம்,மூளை நரம்பியல், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம்,புனர்வாழ்வு மருத்துவம், சித்தா, யோகா, யுனானி, ஓமியோபதி மருத்துவ சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் உள்ளன.

பொது அறுவை சிகிச்சை, எலும்பு, கண், காது, மூக்கு, தொண்டை, சிறுநீரக அறுவை சிகிச்சைகள் ஆகியவையும் இங்குவழங்கப்படும். இதற்காக அதிநவீன உபகரணங்களும் வரவுள்ளன.

இந்த மருத்துவமனை முதியோருக்கான பிரத்யேக மருத்துவமனையாக திகழ்ந்து, ஒரு மகத்தான சேவையை வழங்கஉள்ளது.

ரூ.313.60 கோடியில் கட்டிடங்கள்: இந்த மருத்துவமனை உட்படதமிழகத்தில் மொத்தம் ரூ.313.60கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்துவைத்துள்ளார். 60 சதவீதம்மத்திய அரசு நிதி, 40 சதவீதம்மாநில அரசு நிதியில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ளரூ.125 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x