Published : 22 Feb 2018 07:48 AM
Last Updated : 22 Feb 2018 07:48 AM

எத்தனை தடைகள் வந்தாலும் சந்திக்க தயார்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு

அரசியலில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை நான் சந்திக்க தயார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தனது அரசியல் பிரவேசத்தின் முதல் படியாக ராமேசுவரத்தில் அப்துல் கலாம் இல்லத்துக்கு நேற்று காலை 7.45 மணிக்கு கமல்ஹாசன் சென்றார். கமலை கலாம் சகோதரர் முத்து மீரான் மரைக்காயர் குடும்பத்தினருடன் வரவேற்றார். அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய கமல்ஹாசன், அவர்களுடன் சிற்றுண்டி அருந்தினார். கலாம் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டுள்ள கலாம் அருங்காட்சியகத்தைப் பார்வை யிட்டார்.

பிரமிப்பூட்டும் எளிமை

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் தொடங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன். பெரிய விஷயங்கள் எளிமை யாகத் தொடங்குகின்றன. எளிமையில் இருந்துதான் உயர்வு பிறக்கும். எனது பயணத்தை ஒரு மாமனிதரின் எளிமையான இல்லத்தில் இருந்து தொடங்கியதில் பெருமகிழ்ச்சி’ எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து கலாம் படித்த பள்ளிக்கு கமல் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு ராமநாதபுரம் கல்வி மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து கலாம் படித்த பள்ளி வழியாக காரில் சென்ற கமல்ஹாசன் அதில் நின்றபடியே மாணவர்களை பார்த்து கை அசைத்துவிட்டு சென்றார்.

மீனவர்களுடன் சந்திப்பு

காலை 9.30 மணியளவில் ராமேசுவரம் கணேஷ் மஹாலில் மீனவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன் பேசியதாவது:

மீனவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது எனது கடமை. தமிழகத்தில் முக்கியமான தொழில்களில் மீன்பிடித் தொழிலும் ஒன்று. மீனவத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். மீனவர்களும் பாதுகாப்புடன் தொழில் செய்ய வேண்டும். உங்களுக்கு ஏற்படும் சுக துக்கங்களை பத்திரிகைகள் வாயிலாக அறிவதற்குப் பதிலாக நான் நேரில் சந்தித்து உங்களின் மொழியிலேயே அறியவந்திருக்கிறேன். மாறிமாறி வரும் ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்களே தவிர அதனை நிறைவேற்ற வில்லை.

கடல் மேலாண்மை, நீங்கள் செயல்பட வேண்டிய விதம், சர்வதேச சட்டங்களைப் பற்றியும் நாம் பேச வேண்டும். மீண்டும் நான் வருகிறேன். நாம் கலந்துரையாடலாம், அதற்கான நாளும், நேரத்தையும் தேர்வு செய்வோம் என்றார்.

மீனவர்களுடன் கமல் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 3 நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டுச் சென்றதில் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் 10.30 மணியளவில் ராமேசுவரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மீண்டும் மீனவப் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.

அப்போது விசைப்படகு மீனவ பிரதிநிதிகள், ‘மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. கமல்ஹாசன் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுவார் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், கடலில் தத்தளிக்கும்போது தப்பிப் பிழைக்க ஒரு கட்டை கிடைப்பதுபோல் கமல்ஹாசன் கிடைத்துள்ளார்’ எனக் கூறினர்.

இதைத் தொடர்ந்து மீனவர் சங்கப் பிரதிநிதிகளை ஆரத்தழுவி கமல், ‘பொன்னாடைகள் போர்த்திக் கொள்ளும் வழக்கம் இல்லை. இங்கு நானே ஆடைதான். அவர்களை நான் தழுவும்போது அவர்களுக்கு நான் ஆடை, எனக்கு அவர்கள் ஆடை’ என்றார்.

சரித்திரம் படைக்கத் தயார்

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் கூறியதாவது: கலாமின் வீட்டில் இருந்து எனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதில் எந்த அரசியலும் இல்லை. கலாம் பயின்ற பள்ளிக்குச் செல்ல நினைத்ததிலும் எந்த அரசியலும் இல்லை. ஆனால், நான் கலாம் பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டதில் அரசியல் இருக்கிறது. சினிமாவிலேயே ஆயிரம் தடைகளைத் தாண்டி சரித்திரம் படைத்தேன். அரசியலில் எத்தனை தடைகள் வந்தாலும் அதை நான் சந்திக்க தயார்.

கலாமின் பள்ளிக்கூடத்துக்குச் செல்லவிடாமல் மட்டுமே அவர்களால் தடுக்க முடியும். ஆனால் நான் பாடம் படிப்பதை அவர்களால் தடுக்க முடியாது. கலாமின் நாட்டுப்பற்று, கலாமின் வாழ்க்கை எனக்கு பாடம். அவரது வாழ்க்கை எனது பாடத்தின் ஒரு பகுதி.

அரசியலுக்கு வர தொழில் முக்கியம் அல்ல. ஒரு காலத்தில் வழக்கறிஞர்கள் காந்தி, நேரு, திலகர், அம்பேத்கர், ராஜாஜி என்று அரசியலுக்கு வந்தார்கள். அரசியலில் உணர்வுள்ள, உத்வேகம் உள்ள, ஆசையுள்ள யார் வேண்டுமானாலும் வரலாம்.

சினிமா பயணத்துக்கும் அரசியல் பயணத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதுவும் மக்கள் தொடர்புதான். சினிமாவை விட அரசியலில் பொறுப்பு அதிகம். சினிமாவில் இருந்த பெருமையை விட அரசியலில் அதிக பெருமையும் இருப்பதாக நினைக்கிறேன் என்றார்.

பின்னர் 11.30 மணியளவில் பேக்கரும்பில் கலாம் நினைவிடத்துக்குச் சென்ற கமல்ஹாசன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x