பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் பூந்தமல்லி அருகே திடீர் சாலை மறியல்

பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் பூந்தமல்லி அருகே திடீர் சாலை மறியல்
Updated on
1 min read

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் நேற்று பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழக அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் சங்கம் சார்பில் நேற்று பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பூந்தமல்லி டிரங்க் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, தகவலறிந்த பூந்தமல்லி போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in