Published : 07 Feb 2018 11:02 AM
Last Updated : 07 Feb 2018 11:02 AM

தென்பெண்ணை ஆற்று நீரையும் தடுக்க முயற்சிப்பதா?- கர்நாடக அரசுக்கு வைகோ கண்டனம்

காவிரியில் தமிழ்நாட்டின் மரபு உரிமையைத் தட்டிப் பறித்துவிட்ட கர்நாடகம், தென்பெண்ணை ஆற்று நீரையும் தடுக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மேலும், மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, தென்பெண்ணை ஆற்று நீரை உறிஞ்சும் வகையில் கர்நாடகம் தீட்டி உள்ள திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், ''காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல், இந்த ஆண்டு சம்பா சாகுபடி பயிர்களை கருகச் செய்துவிட்ட கர்நாடகா, வட தமிழகத்தின் நீராதாரமான தென்பெண்ணை ஆற்றில் வரும் நீரை தடுப்பதற்கானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கர்நாடக மாநிலம், சிக்கப்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி துர்க்கம், நந்தி மலையில் உற்பத்தியாகும் நீர், ஒசகோட்டம், ஒரத்தூர் வழியாக தட்சிணப் பிணாசினி ஓடை, கொடியாளம் பகுதியில் தமிழகத்தைத் தொட்டு, தென்பெண்ணை ஆறாக தமிழ்நாட்டின் எல்லைக்குள் நுழைகிறது. தமிழகத்தில் 320 கி.மீ. தொலைவு பாயும் இந்த ஆறு, கொடியாளம் தடுப்பணையைத் தாண்டி ஒசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, பாடூர் ஏரிகளை நிரப்பி, தருமபுரி மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு வந்து சேர்ந்து, விழுப்புரம் மாவட்டம் வழியாகச் சென்று கடலூரில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

தென்பெண்ணை ஆறு சுமார் இரண்டாயிரம் ஏரிகளில் நிரம்பி, சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் தமிழ்நாட்டுக்கு வரும் ஒட்டுமொத்தத் தண்ணீரையும் தடுப்பதற்காக கர்நாடக அரசு ஒரத்தூர் ஏரியில் மிகப் பெரிய நீரேற்று நிலையம் அமைத்து, அதன் மூலம் முழுத் தண்ணீரையும் ஒசகோட்டா ஏரிக்கு திருப்பி, அங்கிருந்து கோலார் தங்கவயல், மாலூர் பகுதிகளில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட ஏரிகளுக்கும், குண்டூர், மானியங்கிரி, சிக்கத்திருப்பதி ஏரிகளுக்கும் கால்வாய் மூலம் கொண்டு செல்ல நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் திட்டம் தீட்டி இதனைச் செயல்படுத்தியது.

பெங்களூரு நகருக்கும் நீராதாரமாக இருக்கும் தென்பெண்ணை ஆற்று நீர், பெல்லண்டூர் ஏரிக்கு வந்து வரதூர் ஏரியைச் சென்றடையும். இந்த இரு ஏரிகளும் நிரம்பிய பிறகு வெளியேறும் நீர் கிளை ஆறு மூலமாக மீண்டும் தென்பெண்ணை ஆற்றில் கலந்து தமிழகம் நோக்கி வரும்.

பெங்களூரு நகரின் கழிவு நீர், பெல்லண்டூர் மற்றும் வரதூர் ஏரிகளில்தான் கலக்கிறது. கர்நாடக அரசு இந்த இரு ஏரிகளின் நீரையும் கோலார் மற்றும் சிக்கப்பல்லாகூர் மாவட்டங்களின் விவசாயத் தேவைகளுக்குத் திருப்பி விட இந்த ஏரிகளில் ராட்சத குழாய்கள் மூலம் நீரேற்று நிலையங்களை அமைத்துள்ளது. பெங்களூரு நகரில் பெய்யும் மழைநீர் முழுவதும இவ்விரண்டு ஏரிகளில்தான் வந்து சேர்ந்து தென்பெண்ணை ஆற்றின் நீராதாரமாக இருக்கிறது.

தற்போது இந்த நீரைத் தடுத்து, கோலார், சிக்கபல்லாகூர், சீனிவாசபுரா, முழுபாகல், பங்காருபேட்டை போன்ற பெங்களூரு புறநகர் பகுதிகளில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட சிறு சிறு ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் பெங்களூரு நீர் ஆதாரம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தின் கீழ் பெங்களூரு நகரின் கழிவு நீரையும் சுத்திகரித்து, பெல்லண்டூர், வரதூர் ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டத்தையும் கர்நாடக அரசு உருவாக்கி, தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர்கூட வந்து சேர்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

கர்நாடக அரசின் இத்திட்டங்களால் தென்பெண்ணை ஆற்றை நம்பி உள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்கன் விவசாயத் தேவைக்கும், குடிநீருக்கும் சொட்டுநீர்கூட கிடைக்காது. தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஒசூர், கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை ஆகியவை வறண்டு போகும். தென்பெண்ணை ஆற்றில் நீர் இல்லாமல் போனால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மக்கள் பரிதவிக்கும் நிலைமை உருவாகும்.

1892-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கும் - மைசூர் சமஸ்தானத்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் திட்டங்கள் மற்றும் பாசன திட்டங்களுக்கு தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெறவேண்டும். காவிரியில் தமிழ்நாட்டின் மரபு உரிமையைத் தட்டிப்பறித்துவிட்ட கர்நாடகம், தென்பெண்ணை ஆற்று நீரையும் தடுக்க முயற்சிப்பது கண்டனத்துக்கு உரியது.

மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, தென்பெண்ணை ஆற்று நீரை உறிஞ்சும் வகையில் கர்நாடகம் தீட்டி உள்ள திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x