Published : 24 Feb 2024 06:00 AM
Last Updated : 24 Feb 2024 06:00 AM

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு டிஐஜி நியமனம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு புதிதாக டிஐஜி நியமிக்கப்பட்டுள்ளார். 2 எஸ்.பி.க்களுக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 2022 அக்டோபர் மாதம் கார் சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உயிரிழந்தார். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்திய விசாரணையில் ஜமேஷா முபீன், தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்பாட்டில் உள்ள கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் தமிழக காவல் துறை உயர் அதிகாரிகள் சென்றனர். அங்கு, அந்த பிரிவு செயல்படும் விதம், அவா்கள் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள், அந்த பிரிவில் உள்ள காவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி, தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, அதுகுறித்த விவரங்களை சேகரித்தனா்.

பின்னர், இந்த சிறப்பு பிரிவுக்கான வரைவு திட்டத்தை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான போலீஸார் தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பினர். ஒரு பயிற்சி பள்ளி தொடங்கி, 18-22 வயதுடைய திறமையான, துணிச்சல் மிக்க இளைஞர்களை காவல் துறையில் இருந்து தேர்வு செய்வது, அவர்களுக்கு ராணுவ அதிகாரிகள், பிற மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிப்பது, முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களில் தீவிரவாத தடுப்பு பிரிவை தொடங்குவது என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல் துறையின் நுண்ணறிவு பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. டிஐஜி தலைமையில் இப்பிரிவு செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உளவு பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு) டிஐஜி ஜெ.மகேஷுக்கு கூடுதல் பொறுப்புவழங்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவின் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல, எஸ்பிசிஐடி - சிறப்பு பிரிவு எஸ்.பி அருளரசுக்கு தீவிரவாத தடுப்பு பிரிவு தலைமையக கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்பு பிரிவின் கோவை எஸ்.பி. சசிமோகனுக்கு, மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலர் அமுதா நேற்று பிறப்பித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x