Published : 23 Feb 2018 08:54 AM
Last Updated : 23 Feb 2018 08:54 AM
விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதாவின் 150-வது பிறந்த நாள் ரத யாத்திரை 3 லட்சம் கல்லூரி மாணவிகளைச் சென்று அடைந்துள்ளதால், அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு துணை நிற்பார்கள் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நம்பிக்கை தெரிவித்தார்.
சுவாமி விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதாவின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ‘சகோதரி நிவேதிதா-150 ரத யாத்திரை’ கடந்த மாதம் 22-ம் தேதி கோவையில் இந்துஸ்தான் கல்லூரி யில் தொடங்கியது. இந்த ரத யாத்திரை புதுச்சேரி மற்றும் 27 மாவட்டங்களுக்கு 30 நாட்கள் பயணம் செய்து 3 லட்சம் கல்லூரி மாணவிகளை சந்தித்து சாதனை படைத்துள்ளது.
இந்த ரத யாத்திரை நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: அயர்லாந்து நாட்டில் பிறந்த சகோதரி நிவேதிதா தனது 47 ஆண்டு கால வாழ்க்கையை இந்திய மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தார். பாரதியார் ‘புதுமைப் பெண்’ என்ற இலக்கியப் படைப்பை அளிப்பதற்கு நிவேதிதாதான் காரணமாக இருந்தார்.
100 இளைஞர்கள்
எனக்கு 100 இளைஞர்களைக் கொடுங்கள். நாட்டை மாற்றிக் காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர். இந்த ரத யாத்திரை 3 லட்சம் கல்லூரி மாணவிகளைச் சென்றடைந்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்துக்கு இவர்கள் துணை நிற்பார்கள் என்று ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்.
ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தர் பேசும்போது, “சகோதரி நிவேதிதா தன்னம்பிக்கை, தைரியம், இறை நம்பிக்கை, இறை வழிபாடு, நாட்டுப் பற்று கொண்டிருந்தார். அவரைப் போல மக்களிடத்தில் குறிப்பாக பெண்களிடத்தில் நல்லொழுக்கம், ஆன்மிகம், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். ரத யாத்திரை மாநில ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT