Last Updated : 12 Feb, 2018 03:39 PM

 

Published : 12 Feb 2018 03:39 PM
Last Updated : 12 Feb 2018 03:39 PM

பாம்பனில் மீனவர்களுக்கு வாட்ஸ் அப் வானொலி சேவை அறிமுகம்

உலக வானொலி தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அருகே பாம்பனில் இயங்கி வரும் கடல் ஓசை 90.4 சமுதாய வானொலி நிலையம் வாட்ஸ் அப் வானொலி சேவையை செவ்வாய்க்கிழமை (நாளை) முதல் அறிமுகப்படுத்துகிறது.

தொலைக்காட்சி, இணையம், கைபேசி என பல்வேறு தொடர்பு சாதனங்கள் வந்தாலும் வானொலிக்கென்று எப்போதும் தனி இடம் உண்டு.

வானொலி என்ற சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனைத்தை உலகிற்கு தந்த மார்கோனி 20.07.1937 அன்று மறைந்தார். மார்கோனி மறைந்து 81 ஆண்டுகளுக்கு பிறகும் கூட மக்களுக்கு வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி கல்வி அளிக்கும் தகவல் களஞ்சியமாகவும் வானொலி செயல்பட்டு வருகிறது.

03.11.2011 அன்று ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ)வின் 36-வது பொதுச்சபை கூட்டத்தில் உலக வானொலி தினத்தை அறிவிக்க வேண்டும் என ஸ்பெயின் வலியுறுத்தியது. இதனடிப்படையில் வானொலியை ஒரு ஊடகமாகக் கொண்டு, தகவல் மற்றும் தகவல் சுதந்திரம் ஆகியவற்றை மேம்படுத்தவும், ஒலிபரப்பாளர்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், வானொலி வலையமைப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக யுனெஸ்கோ பிப்ரவரி 13-ம் நாளை உலக வானொலி தினமாக அறிவித்தது.

கடந்த 04.02.2017 அன்று ராமேசுவரம் அருகே பாம்பனில் நேசக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் உலகிலேயே முதல் முறையாக மீனவர்களுக்கான பிரத்யேக சமுதாய வானொலி நிலையம் 'கடல் ஓசை' என்ற பெயரில் முன்னாள் உள்துறை மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் உலக வானொலி தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த ஓராண்டாக ஒலிபரப்பட்டு வரும் கடல் ஓசை சமுதாய வானொலி வாட்ஸ் வானொலி சேவையை நாளை முதல் தொடங்குகிறது.

இது குறித்து கடல் ஓசை வானொலியின் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறுகையில், ''ராமநாதபுரம் மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு அகில இந்திய வானொலி வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளித்து இளைஞர்களாலேயே 'கடல் ஓசை' சமுதாய வானொலி 90.4 என்ற அலைவரிசையில் கடந்த ஓராண்டு காலமாக இயங்கி வருகிறது.

'கடல் ஓசை' வானொலியில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களிலிந்து செல்லும் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு சுனாமி, புயல் சின்னம், கடல் சீற்றம் போன்ற ஆபத்தான காலங்களில் மீனவர்கள் செய்ய வேண்டியது என்ன?, கடலில் அபாயகரமான பகுதிகள் எவை? அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள் ஆகிய தகவல்களை ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

மேலும் மீனவர்களுக்கான மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்கள், மீனவக் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு, மீனவப் பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, சுகாதாரமான முறையில் மீன்களை கையாள்வது, மீன் சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி , குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நிகழ்ச்சி, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் வசிக்கும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகளை கடல் ஓசை வானொலியிலும் www.kadalosaifm.com இணையதளத்திலும் கேட்கலாம்.

முன்னோடி வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச் அப்துல் ஹமீது ஆலோசனையின் பேரில் உலக வானொலி தினத்தை முன்னிட்டு கடல் ஓசை வானொலியில் ஒலிபரப்பப்படும் தகவல்களை நேயர்களிடம் உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதற்கு வசதியாக வாட்ஸ் அப் வானொலி சேவையை +91 7094439999 என்ற எண்ணிலிருந்து தொடங்குகிறோம்.

வானொலி நிகழ்ச்சி குறித்தும் நேயர்கள் தங்களின் கருத்துகளை இதன் மூலம் உடனுக்குடன் தெரியப்படுத்ததுவதன் மூலம் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் அவை இடம்பெறும்'' என்றார் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x