Published : 11 Aug 2014 07:00 PM
Last Updated : 11 Aug 2014 07:00 PM

ரூ.3.5 கோடி கார் பரிசு கிடைத்ததாக மின்னஞ்சல்: ரூ.3.11 லட்சத்தை இழந்த முதியவர்

திருவில்லிபுத்தூரில் ரூ.3.5 கோடி மதிப்பிலான கார் பரிசு விழுந்ததாக இ-மெயிலில் கூறப்பட்ட தகவலை நம்பி ரூ.3.11 லட்சத்தை கொடுத்து முதியவர் ஒருவர் ஏமாந்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.

திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூனங்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் எஸ்.முருகசேன் (68). ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. இவர் வியாபாரம் தொடர்பாக கணினி இணையதளத்தை பயன்படுத்துவது வழக்கம். கடந்த மார்ச் 9-ம் தேதி இவரது மின்னஞ்சலுக்கு ரூ.3.50 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கார் பரிசு விழுந்திருப்பதாக தகவல் வந்தது.

மார்க்பிலிப் என்பவர் எஸ்.எம்.எஸ். மூலம் சுங்கத்துறைக்கு கொடுப்பதற்காக ரூ.21,500-ம், சட்ட அங்கீகாரத்துக்காக ரூ.1 லட்சமும், போதை பொருள் மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவின் அனுமதி பெற ரூ.2 லட்சமும் கட்ட வேண்டும் என்று படிப்படியாக தெரிவித்து வந்துள்ளார்.

இதனை நம்பிய முருகேசன், திருவில்லிபுத்தூர் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ராஜபாளையம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலம் பணத்தைக் கட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 14-ம் தேதி வந்த மின்னஞ்சலில் 95 சதவீதம் உங்களது பணிகள் முடிந்துவிட்டன. மேலும் 5 சதவீத பணிகளுக்காக ரூ.1.60 லட்சம் வரி கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த முருகேசன், கடந்த மார்ச் 15-ம் தேதி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு கொடுத்தார்.

இதுகுறித்து, விசாரணை நடத்த திருவில்லிபுத்தூர் நகர் போலீஸாருக்கு உத்தரவிடப் பட்டது. பின்னர், சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில், மோசடி செய்தவர்களின் செல்போன் எண்கள், அவர்கள் பயன்படுத்திய கணினியின் ரகசிய எண்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கண்டறிந்தனர். இதுகுறித்து இரு வங்கிகளுக்கும் முருகேசன் புகார் செய்தார். பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து வந்த பதிலில், இந்த மோசடியில் ஈடுபட்ட மார்க்பிலிப் என்பவர் கணக்கில், ஒரே மாதத்தில் ரூ.1 கோடிக்கு பணம் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். 5 வங்கிக் கணக்குகளில் இருந்து இந்த மோசடி நடைபெற்றுள்ளதும் தெரியவந்தது

மேலும், மோசடியில் ஈடுபட்டவர்களின் வருமானவரிக் கணக்கு எண் உள்ளிட்டவையும் கண்டறியப்பட்டுள்ளன. பெரும் தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணை, மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவுக்கு தற்போது மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x