Last Updated : 14 Feb, 2018 12:39 PM

 

Published : 14 Feb 2018 12:39 PM
Last Updated : 14 Feb 2018 12:39 PM

குப்பை அள்ளுவோர் தொடங்கி பூக்கள் விற்பனை செய்வோர் வரை புகைப்படமாக்கிய அமெரிக்க தூதர்

குப்பை அள்ளுவோர் தொடங்கி தெருவில் பூக்கள் விற்போர் வரை புன்னகைக்கக் கோரி புகைப்படம் எடுத்தார் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் (62).

புதுச்சேரிக்கு வந்துள்ள அவர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோரை இன்று சந்திக்கிறார்.

இந்தியாவில் அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ரிச்சர்டு வர்மாவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு ஏழு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்க அதிபரின் வெளிநாட்டு பொருளாதார விவகாரத் துறை மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்த கென்னத் ஜஸ்டரை இந்தியாவுக்கான தூதராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் நியமித்தார்.

இவர் இந்தியா, அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக முக்கியப் பங்காற்றியவர்.

முக்கிய தூதரான இவர் கடற்கரை ஒட்டியுள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார். வழக்கமாக புதுச்சேரி வரும் தூதர்கள் முதல்வர், ஆளுநரை மட்டும் சந்திப்பது வழக்கம். அதேபோல் புதுச்சேரி வந்த கென்னத் ஜஸ்டர், சற்று வித்தியாசமாக செயல்பட்டார்.

காலை வேளையிலேயே சாலையில் நடந்து சென்று புதுச்சேரியில் பாரம்பரியக் கட்டடங்களைப் பார்வையிட்டு வியந்தார். கடற்கரைச் சாலையிலுள்ள காந்தி சிலை, அப்பகுதியிலுள்ள கப்ஸ் கோயில் உட்பட பல பாரம்பரிய விஷயங்களை, புகைப்படங்களாக எடுத்துக் கொண்டு விவரங்கள் கேட்டார்.

அவ்வழியே நடந்து பாரதி பூங்காவுக்கு வந்தார். அங்கு குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்த பெண்களை புகைப்படம் எடுத்தார். பின்னர் நடந்தபடி மணக்குள விநாயகர் கோயிலுக்கு வந்து அங்கு பூக்கள் விற்பனை செய்யும் பெண்களை புன்னகைக்கக் கூறி, புகைப்படம் எடுத்துகொண்டார்.

பின்னர் காரில் ஏறி வைசியாள் வீதிக்கு வந்தார். பாரம்பரிய புகழ் பெற்ற இவ்வீதியின் இருபுறமும் மரங்களுடன் அழகாய், ரம்மியமான சூழலில் இருக்கும். யுனெஸ்கோ விருது பெற்ற இவ்வீதியை புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு புல்வார் பகுதியிலுள்ள நேர்கோட்டு வீதிகளின் விவரங்களை கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x