ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: காவல் ஆணையரிடம் ஜீயர் புகார்

ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: காவல் ஆணையரிடம் ஜீயர் புகார்
Updated on
1 min read

திருச்சி: ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக, அந்த மடத்தின் ஜீயர்காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் ஸ்ரீபலஹாரி புருஷோத்தம ஜீயர் மடம் உள்ளது. இந்த மடத்தின் 6-வது ஜீயர் பராங்குச புருசோத்தம ராமானுஜ ஜீயர்(42), வழக்கறிஞர் ஸ்ரீராமுடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினியிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது.

ஏறத்தாழ 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் பலஹாரி புருஷோத்தம ஜீயர் மடத்துக்கு ரூ.500 கோடிக்கும் மேல் அசையா சொத்துகள் உள்ளன. உள்ளூரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களின் தொல்லை தாங்க முடியாமல், இதற்கு முன்பு ஜீயராக இருந்தவர் 2010-ல் தலைமறைவாகிவிட்டார்.

2022-ல் மடத்தின் 6-வது ஜீயராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போது மடத்தின் வரவு-செலவு கணக்குகளை சரி பார்த்தபோது, மடத்துக்குச் சொந்தமான சில இடங்களை 3-வது நபர்கள் மூலம் அபகரித்தது தெரியவந்தது.

மேலும், மடத்துக்குச் சொந்தமான சொத்துகளை முழுமையாககைப்பற்றும் நோக்கில் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த லாட்ஜ் உரிமையாளர் ஒருவர், என்னை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். அவரது மோசடிகளுக்கு, ஏற்கெனவே மடத்தில் பணிபுரிந்து வந்த ஒருவர் உள்ளிட்ட 7 பேர் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in