

சென்னை: சென்னை, நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கார சென்னை அட்டை மற்றும் ஸ்டோர் வேல்யூ பாஸ் ( SVP ) மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் மெட்ரோ பயணிகள் குடும்பத்துடன் பயணிப்பதற்கான ஒற்றை பயணச்சீட்டு பெறும் வசதியை நிறுவன மேலாண் இயக்குநர் மு.அ.சித்திக் தொடங்கி வைத்தார்.
பின்னர் சித்திக் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தக் கட்டணத்தை சிங்கார சென்னை அட்டை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செல்போன் செயலியில் உள்ள ஸ்டோர் வேல்யூ பாஸ் ( SVP ) மூலம் செலுத்தலாம். இவ்வாறு சிங்கார சென்னை அட்டை ( என்சிஎம்சி ) மூலம் வாகன நிறுத்தக் கட்டணத்தை செயல்படுத்தும் முதல் மெட்ரோ அமைப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகும்.
மேலும், ஒவ்வொரு பயணிக்கும் தனிப்பட்ட க்யூ ஆர் குறியீடு கொண்ட பயணச் சீட்டுகளை வழங்குவதற்கு பதிலாக பலருக்கு ஒரே பயணச் சீட்டை வழங்கும் முறையும் அமல்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் 5 பயணிகள் வரை தானியங்கி கட்டண வசூல் அமைப்பு வழியாக தடையின்றி செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.