Published : 20 Feb 2018 07:49 PM
Last Updated : 20 Feb 2018 07:49 PM

அண்ணா நகரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து: தற்கொலைக்கு முயன்ற பொறியாளர்

அண்ணா நகரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை சக நண்பர் கத்தியால் குத்தியுள்ளார். கைதுக்கு பயந்த ஆண் நண்பரும் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள், தாக்குதல்கள் அதிகரித்து வருவது கடந்த ஒருவாரமாக செய்தியாகி வருகிறது.

சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் சத்யா (22) அண்ணா நகரில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதே பகுதியில் வசித்து வந்த ராஜேஷ் பள்ளிப் பருவத்திலிருந்தே சத்யாவுடன் பழகி வந்துள்ளார்.

பின்னர் ராஜேஷுக்கு சத்யா மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவரின் காதலை  சத்யா மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஐந்தாண்டுகளாக சத்யாவை ஒரு தலையாகக் காதலித்து வந்தார் ராஜேஷ்.  சத்யாவை மறக்க முடியாததால், அவருக்கு ராஜேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக்  கூறப்படுகிறது.

ஆனால் மாணவி சத்யா தொடர்ந்து காதலை ஏற்க மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் பொறியாளர் பட்டம் பெற்ற ராஜேஷுக்கு கோவையில் வேலை கிடைத்ததும், அங்கு சென்று விட்டார்.

சத்யாவும் அண்ணா நகர் மகளிர் கல்லூரியில் எம்.எஸ்.சி படிக்கத் தொடங்கி உள்ளார். இந்நிலையில் கடந்த பிப்.14 அன்று காதலர் தினம் வந்ததை அடுத்து, ராஜேஷ் மீண்டும் சத்யாவிடம் தனது விருப்பத்தைக் கூறியுள்ளார்.

சத்யா திட்டவட்டமாக மறுத்து ராஜேஷிடம் பேசுவதைத் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், சத்யாவை தனது நண்பர் மூலம் அண்ணா நகரில் உள்ள அண்ணா டவருக்கு வரவழைத்துள்ளார்.

வரமறுத்த சத்யாவிடம், 'இதுதான் இறுதி இன்று பேசி முடித்துவிட்டு போய்விடு இனி உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன்' என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து சத்யா அண்ணா டவர் பார்க் வந்ததும், அங்குள்ள அடர்ந்த புல்வெளிப்பகுதிக்கு சத்யாவை ராஜேஷ் அழைத்துச்சென்றுள்ளார். அங்கு பேசிக்கொண்டிருக்கும் போதே இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்ததில் ராஜேஷ் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து சத்யாவைக் குத்தியுள்ளார்.

இதில் மாணவி சத்யாவுக்கு இடதுபக்க மார்பகம், இடதுபக்க வயிறு, வலதுபக்க கை, வலது தோள்பட்டை, வலது பக்க மார்பகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அலறி கூச்சலிடவே பூங்காவில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர்.

இதைப்பார்த்த ராஜேஷ் பயந்து போய் தன்னைத்தானே அதே கத்தியால் மார்பகம், வயிறு என ஆழமாக குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக பொதுமக்கள் அவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சென்னையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை அதிகரித்து வருகிறது. காதலிக்க மறுக்கும் பெண்ணை தாக்குவது, வழிப்பறியில் தாக்குவது, ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது நடக்கிறது.

இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x