Published : 18 Feb 2018 03:01 AM
Last Updated : 18 Feb 2018 03:01 AM

இந்த விதை கடையில் கவிதையும் கிடைக்கும்

விதைகள் எங்கு உருவாகின்றன? இசையமைப்பாளர் தந்த மெட்டை ஹெட்போனில் கேட்ட படி யோசிக்கும் கவிஞரிடம், காதலில் விழுந்தவரிடம் இருந்து கவிதைகள் வருவது உண்டு. பெரும்பாலும், சலனமற்ற, மனதுக்கு இதமான அமைதியான சூழல்களிலேயே கவிதைகள் உருவாகின்றன. ஆனால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான கடைத்தெருவில், கடை வியாபாரத்தையும் கவனித்தபடி இருக்கும் பெண், கவிதைகள் எழுதுபவர் என்பது ஆச்சரியம்தானே!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாரத ஸ்டேட் வங்கி அருகில் சாலையோரம் இருக்கிறது அந்த தள்ளுவண்டிக் கடை. தோட்டக்கலைச் செடிகளுக்கான விதைகளை தட்டுகளில் வைத்து வியாபாரம் செய்து வருகிறார் சரஸ்வதி (48). விதை விற்கும் தொழி லாளி என்பதோடு இவருக்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. அது, கவிதை எழுதும் படைப்பாளி.

‘மன்னை சரஸ்வதி தாயுமானவன்’ என்ற பெயரில், ‘நெல்மணிகள், உயிர்த்துளிகள்’ என்ற தலைப்பில் 284 கவிதைகள் அடங்கிய தொகுப்பை எழுதியிருக்கிறார். இதுதவிர, நூற்றுக்கணக்கான கவிதைகளை கைவசம் வைத்துள்ளார். ‘செம்மலர்’ போன்ற பொதுவுடமை இயக்க இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

விதைக்கடையில் வியாபாரத்தை கணவர் தாயுமானவனுடன் சேர்ந்து கவனித்துக் கொள்கிறார். தினமும் கிடைக் கும் 200, 300 ரூபாய் வருமானத்தைக் கொண்டு தங்களது 3 மகள்களையும் முதுகலை பட்டதாரிகளாக ஆக்கியுள்ளனர். அவர்களில் இருவருக்கு திருமணமும் முடித்துவிட்டனர்.

வீட்டு வேலைகள், கடையில் வியாபாரத்துக்கு நடுவில், சரஸ்வதிக்குள் ஒரு கவிஞர் உருவானது எப்படி? அவரே கூறுகிறார்..

ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். தாய்மாமாவும், அண்ணனும் பொதுவுடமை இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதால், இயல்பாகவே எந்த ஒரு நிகழ்வையும் பொதுப் பார்வையோடு பொருத்திப் பார்க் கும் பழக்கம் எனக்கு உண்டு. அதனால், பாடப் புத்தகங்களை விட கதை, கவிதை, கட்டுரைகள்தான் அதிகம் படித்தேன்.

கவிதை எழுதவேண்டும் என்று உட்கார்பவர்களுக்கு தான் கற்பனை வேண்டும். என் கவிதைகளில் கற்பனைகள் அதிகம் இருக்காது. என் வாழ்வில் நடந்த சம்பவங்கள், என் கடைக்கு வரும் மக்கள் வெளிப்படுத்தும் ஏக்கங்கள் என என்னை பாதிக்கிற விஷயங்களை கவிதைகள் ஆக்கிவிடுகிறேன்’’ என்று பெருமிதத் தோடு கூறியவர், தான் எழுதிய ‘வரதட்சணை’ என்ற கவிதையைக் காட்டினார்.

‘‘பட்டப்பகலில்

பலரும் பார்த்திருக்க

கெட்டிமேளச் சத்தத்தில்

கொள்ளை போனது

பெண்ணோடு

பொன்னும் பொருளும்!’’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x