Published : 19 Aug 2014 03:58 PM
Last Updated : 19 Aug 2014 03:58 PM

பாம்பன் பாலத்தை முற்றுகையிடும் போராட்டம்: ராமேஸ்வர மீனவர்கள் அறிவிப்பு

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் சாலைப் பாலத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக ராமேஸ்வரப் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்பைடையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 62 விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ராமேஸ்வர மீனவர்கள் கடந்த ஜுலை 24- ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக 27- ஆம் தேதி வரை, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்த்தில் ஈடுபட்டனர்.

மீனவர்களின் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக கடந்த வியாழக்கிழமை இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 94 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உத்திரவிட்டார்.

ஆனால் இலங்கை கடற்படையினரால் கடந்த இரண்டரை மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்ட 62 விசைப்படகுகளை விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் ராமேஸ்வர மீன் பிடித்துறைமுகம் அருகே அனைத்து மீனவ சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மீனவப் பிரநிதிகள் போஸ், சேசு, எம்ரிட் ஆகியோர் கூறியதாவது, "94 தமிழக மீனவர்களை விடுதலை செய்தற்காக தமிழக, மத்திய மற்றும் இலங்கை அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கையில் தமிழக மீனவர்களின் 62 விசைப்படகுகள் பராமரிப்பின்றி கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. எனவே அவற்றை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 5 தங்கச்சிமடம் மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

எங்களின் அடுத்த கட்டப் போராட்டமாக ஆகஸ்ட் 23 அன்று பாம்பன் சாலைப் பாலத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x