Published : 19 Feb 2024 01:09 PM
Last Updated : 19 Feb 2024 01:09 PM

இரு பேரிடர்களால் சிக்கலில் தமிழக நிதிநிலை: பட்ஜெட் 2024 உரையில் அமைச்சர் தகவல்

சென்னை: "நடப்பாண்டில் இரண்டு தொடர் பேரிடர்கள் ஏற்படுத்திய பாதிப்பு இந்த சூழ்நிலையை மேலும் மோசமடைய செய்து, மாநில அரசின் நிதி நிலைமையை சிக்கலாக்கியுள்ளன." என்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுவதால் அத்திட்டத்துக்கான முழு செலவையும் மாநில அரசே தனது நிதியில் இருந்து ஏற்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக அரசுக்கு நடப்பாண்டில் ரூ.9000 கோடி செலவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும், 2022ம் ஆண்டு ஜூன் முதல் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு நிறுத்தப்பட்டதால் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20000 கோடி ரூபாய்வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் தான் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நடப்பாண்டில் இரண்டு தொடர் பேரிடர்கள் ஏற்படுத்திய பாதிப்பு இந்த சூழ்நிலையை மேலும் மோசமடைய செய்து, மாநில அரசின் நிதி நிலைமையை சிக்கலாக்கியுள்ளன. தேவையான நிவாரணத் தொகை வழங்குவதற்கும் தற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கும் எதிர்பாராத செலவினங்கள் ஏற்பட்டுள்ளதுடன் குறிப்பிடத்தக்க வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. பல முறை ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து எந்த ஒரு நிதியையும் மாநில அரசுக்கு இதுவரை ஒன்றிய அரசு வழங்கவில்லை.

மாநிலத்தின் எதிர்பார்களுக்கு நேர்மாறாக மாநில அரசின் நிதி நிலையை மேலும் பாதிக்கும் வகையில் கடன் வாங்கும் வரம்பு குறித்து ஒன்றிய அரசு கடுமையான நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி ஆதாரங்களை திரட்டும் மாநில அரசின் அதிகாரத்தையும் ஒன்றிய அரசு கட்டுப்படுத்துகிறது.

இத்தகைய கடுமையான நிபந்தனைகளுள் ஒன்றின் விளைவாக நடப்பாண்டில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு மாநில அரசின் இழப்பீட்டு நிதியாக ரூ.17,117 கோடியை வழங்கியுள்ளது. இந்த நிபந்தனையை நிறைவேற்ற தவறும் நெறிவில் அதற்கு இணையான தொகை நமது கடன் வாங்கும் வரம்பில் இருந்து கழிக்கப்படும். அடுத்த நிதியாண்டில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு இழப்பீட்டு நிதியாக ரூ.14,442 கோடி வழங்கப்பட வேண்டும்.

மின்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்த அரசு உறுதி மேற்கொண்டுள்ள அதேவேளையில் இத்தகைய நிபந்தனை மாநில அரசின் நிதி நிலையின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை பாதிக்கிறது. கடந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட உதய் திட்டத்தினை போன்று இந்த தொகையினையும் நிதி பற்றாக்குறை மற்றும் கடன் உச்ச வரம்பு கணக்கீட்டில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசிடம் முன்வைத்துள்ளது மாநில அரசு.

அண்மையில், பதினாறாவது நிதிக்குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் வரிகளைப் பகிர்ந்தளிப்பதில் முந்தைய நிதிக்குழுக்களால் இழைக்கப்பட்டுள்ள வரலாற்று அநீதியை, டாக்டர். அரவிந்த் பனகாரியாவின் தலைமையில் உள்ள நிதிக்குழுவினால் சரி செய்யப்படும் என்று இந்த அரசு நம்புகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் காரணங்கூறாமல், நாட்டின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய உரிய நிதியை உறுதிசெய்யும் நியாயமான முறையை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

இந்தியா விடுதலை பெற்றபின் நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களும் தங்களுக்கான வளர்ச்சிப் பாதையை வகுத்துக் கொள்ளத் தொடங்கின. எனினும் சமூக முன்னேற்றத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்த விதம் குறித்து உலகப் பொருளாதார அறிஞர்களும், அமைப்புகளும் பாராட்டிப் போற்றுகின்றனர். தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அவர்கள் குறிப்பிட்டதை இப்பேரவையில் பதிவு செய்திட விரும்புகிறேன்.

"Tamil Nadu is one of the states which had achieved rapid progress within a relatively short period despite it starting from appalling levels of poverty, deprivation and inequality. Tamil Nadu initiated bold social programmes and has some of the best public services among all Indian States and many of them are accessible to all on a non-discriminatory basis. Tamil Nadu has one of the highest per capita income and lowest poverty rates among all Indian States. This is an important example of the complementarity between economic growth and public support."

கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் சில மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சி மட்டும் அடைந்தன. மற்ற சில மாநிலங்கள் கல்வி, சுகாதாரம் என சமூகக் குறியீடுகளில் மட்டும் முன்னேற்றம் அடைந்தன. மாற்றாக சமூக முன்னேற்றம், தொழில் வளர்ச்சி என அனைத்து தளங்களிலும் பெருவளர்ச்சி பெற்று தமிழ்நாடு தன் முத்திரையைப் பதித்துள்ளது" என்று அவர் பேசினார். வாசிக்க > தமிழக பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x