Published : 06 Feb 2018 09:25 AM
Last Updated : 06 Feb 2018 09:25 AM

கும்பகோணம் அருகே கொள்ளிடத்தில் குழந்தையுடன் செல்பி எடுத்தவர் ஆற்றில் விழுந்து பலி: கடைசி நொடியில் தூக்கிவீசி குழந்தையை காப்பாற்றினார்

கும்பகோணம் அருகே அணைக்கரையில் தனது ஒன்றரை வயது குழந்தையுடன் செல்பி எடுத்த இளைஞர், கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்து இறந்தார்.

சென்னை அண்ணா நகர் விரிவாக்கம் ஜாக்குவார் டி.வி.எஸ். காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தன்னுடைய மகன்கள் நவீன் (31) உள்ளிட்ட குடும்பத்தினருடன் கடந்த 3-ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அணைக்கரை அருகே முள்ளங்குடியில் உள்ள கோயிலுக்கு வந்தார். இரவு நேரம் ஆகிவிட்டதால் அணைக்கரையில் உள்ள பயணியர் மாளிகையில் தங்கினார்.

இந்நிலையில், அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நவீன், நேற்று முன்தினம் காலை பயணியர் மாளிகை எதிரே உள்ள கொள்ளிடக்கரைக்கு தனது ஒன்றரை வயது குழந்தையான அனிருத்துடன் சென்றார். அங்கு, படித்துறையில் உள்ள தடுப்புக் கட்டையில் நின்றுகொண்டு குழந்தையுடன் சேர்த்து தனது செல்போனில் செல்பி எடுத்துள்ளார்.

அப்போது, தடுப்புக் கட்டையில் படிந்திருந்த பாசியில் வழுக்கிய நவீன், கொள்ளிடம் ஆற்றில் விழுந்தார். தான் விழப்போவதை உணர்ந்து சாதுர்யமாக குழந்தையை வீசிவிட்டார். குழந்தை படித்துறையில் விழுந்தது.

சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து படித்துறையில் இருந்த சிறிதளவு நீரில் தவழ்ந்த குழந்தையை மீட்டனர். நவீனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நவீன் இறந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x