Published : 16 Feb 2024 06:51 PM
Last Updated : 16 Feb 2024 06:51 PM

“மக்களவைத் தேர்தலில் பாடம் புகட்டுவர்” - விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: "ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதத்தில் அரசு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்று நினைக்கும் மத்திய அரசுக்கு விவசாயிகள் அனைவரும் வரும் மக்களவைத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்" என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021-ல் விவசாயிகளின் மாபெரும் எழுச்சிமிக்க போராட்டத்துக்கு அடிபணிந்த மத்திய பாஜக அரசு பல்வேறு வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கியது. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மீண்டும் டெல்லி நோக்கி இந்திய விவசாயிகள்அணி திரளுகின்றனர்.

விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சாரச் சட்டத் திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்படும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி நுழைபவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும் தடியடி நடத்தியும் கலைக்கும் முயற்சியை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. மிகக் கொடுமையாக இரவு நேரங்களிலும் விவசாயிகள் மீது ட்ரோன்கள் வாயிலாகக் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்துவதை ஒருக்காலும் அங்கீகரிக்க முடியாது.

தேசத் துரோகிகள் போலவும் மிகப்பெரிய கொடும் குற்றவாளிகள் போலவும் விவசாயிகளை மத்திய அரசு கையாளுகிறது. ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதத்தில் அரசு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்று நினைக்கும் மத்திய அரசுக்கு விவசாயிகள் அனைவரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.

கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின்சார்பில் கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகளின் நியாயமான போராட்டம் வெற்றி பெறஎங்களுடைய ஆதரவுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x