

சி.பி.ராதாகிருஷ்ணன்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 4,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா, ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சிக்கு வரும் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் மத்திய பல்கலைக்கழகத்தில் ஓய்வு எடுத்து பின்னர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்கள் அளவில் தங்க பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் விரிவாக செய்து வருகின்றது என்ற் தெரிவிக்கப்பட்டுள்ளது.