Published : 18 Feb 2018 03:40 AM
Last Updated : 18 Feb 2018 03:40 AM

ஐடிஐ சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம்: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு

கடந்த 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஐடிஐ படித்தவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழில் தவறு இருந்தால் அதில் திருத்தம் செய்து கொள்ள அணுகலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) கடந்த 2014 ஆகஸ்டு முதல் 2017 ஆகஸ்டு வரை சேர்ந்து ஐடிஐ படித்தவர்களுக்கு சேர்க்கையின்போது வழங்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசால் தேர்வு நுழைவுச்சீட்டு, மதிப்பெண் சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ் (என்டிசி) ஆகியவை ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.

பயிற்சியாளர்களின் பெயர், தந்தை பெயர், தாய் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அப்பிழைகளை சரிசெய்ய இயலாத நிலை முன்பு இருந்து வந்தது.

பிழைகளை சரிசெய்ய வாய்ப்பு

தற்போது, அந்த பிழைகளைச் சரிசெய்ய மத்திய அரசு வாய்ப்பு அளித்துள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயிற்சியாளர்கள் பயன்படுத்தி தங்கள் அசல் சான்றிதழ்களுடன் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள அலுவலகத்துக்கு பிப்ரவரி 22-ம் தேதிக்குள் நேரில் சென்று தங்களுடைய பள்ளி கல்விச் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களைக் காண்பித்து திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

1. மண்டல பயிற்சி இணை இயக்குநர், அரசு ஐடிஐ மாணவர் விடுதி, அழகர்கோயில் மெயின் ரோடு, மதுரை-7.

2. மண்டல பயிற்சி இணை இயக்குநர், என்ஜிஓ ‘பி’ காலனி, பெருமாள்புரம், திருநெல்வேலி 627 007.

3. மண்டல பயிற்சி இணை இயக்குநர், அரசு ஐடிஐ பின்புறம், ஜி.என்.மில்ஸ் அஞ்சல், கோவை 641 029.

4. மண்டல பயிற்சி இணை இயக்குநர், அரசு ஐடிஐ அடுக்குமாடி கட்டிடம் (முதல் மாடி), காஜாமலை, திருச்சி 620 020.

5. மண்டல பயிற்சி இணை இயக்குநர், அரசு ஐடிஐ பின்புறம், கிண்டி, சென்னை 600 032.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x