Published : 03 Feb 2018 07:58 AM
Last Updated : 03 Feb 2018 07:58 AM
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக் கடையில் கொள்ளையடித்து, சவுகார்பேட்டையில் உள்ள அடகுக் கடையில் நாதுராம் கூட்டாளிகள் விற்ற 1.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அடகுக் கடை உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. பெங்களூருவில் விற்கப்பட்ட நகைகளை மீட்க தனிப்படையினர் விரைந்துள்ளனர்.
கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம், அவரது கூட்டாளிகள் தினேஷ் சவுத்ரி, பக்தாராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்தார்.
இந்நிலையில், ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட நாதுராம் உள்ளிட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் ராஜமங்கலம் போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர். அவர்களை 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் கடந்த 30-ம் தேதி அனுமதி அளித்தது.
இதையடுத்து, அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளை எங்கு விற்றார்கள் என்ற விவரத்தை போலீஸார் சேகரித்தனர். ஒன்றரை கிலோ தங்க நகையை சவுகார்பேட்டையில் என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள அடகுக் கடையில் விற்றதாகவும், மற்ற நகைகளை பெங்களூருவில் உள்ள அடகுக் கடையில் விற்றதாகவும் நாதுராம் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், சவுகார்பேட்டையில் உள்ள அடகுக் கடையில் விற்கப்பட்ட ஒன்றரை கிலோ தங்க நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். கொள்ளையர்களிடம் நகைகளை வாங்கிய அடகுக் கடை உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், பெங்களூருவில் விற்ற நகைகளை மீட்க நாதுராம் உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படை போலீஸார் பெங்களூரு அழைத்துச் சென்றுள்ளனர். பெங்களூரு அடகுக் கடையில் விற்கப்பட்ட நகைகளும் விரைவில் மீட்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT