Published : 06 Feb 2018 08:45 AM
Last Updated : 06 Feb 2018 08:45 AM
தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட புதிய விதிகளுக்கு அகில இந்திய பார் கவுன்சிலின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே அந்த விதிகள் செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் வரும் மார்ச் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து இருக்க வேண்டும். இருமுறை பொறுப்பில் இருந்தவர்கள் மீண்டும் போட்டியிடக்கூடாது. அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என்பன உள்ளிட்ட 9 புதிய விதிகளைக் கொண்டுவந்து போட்டியிடும் வழக்கறிஞர்களுக்கான தகுதிகளாக பார் கவுன்சில் சிறப்புக்குழு அறிவித்தது.
இந்த புதிய விதிகளினால் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரி வழக்கறிஞர்கள் முருகேந்திரன், செல்வக்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் .
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவி்ல், ‘வழக்கறிஞர்கள் சட்டத்தின்படி இந்திய பார் கவுன்சில் மற்றும் மாநில பார் கவுன்சிலுக்கு புதிய விதிகளைக் கொண்டுவர அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ, அதே அதிகாரம் சிறப்பு குழுவுக்கும் உள்ளது. ஆனால் அதேநேரம், மாநில பார் கவுன்சில் கொண்டுவரும் விதிகளுக்கு, அகில இந்திய பார் கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்த விதிகள் செல்லும். எனவே தற்போது இந்த புதிய விதிகளுக்கு இன்னும் ஒப்புதல் பெறவில்லை.
இந்த சூழலில் இந்த புதிய விதிகள் போட்டியிடும் வழக்கறிஞர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. 10 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றிய வழக்கறிஞர்களும் இந்தத் தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை. அவர்களின் வேட்புமனுவை தேர்தல் குழு பரிசீலிக்கலாம். ஆனால், இவை அனைத்தும் அகில இந்திய பார் கவுன்சில் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்பட்டது’ எனக்கூறி வழக்கை பைசல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT