

பெண்ணை இழிவுபடுத்தும் வார்த்தையை 'நாச்சியார்' டீஸரில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினருமான உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாச்சியார்'. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. டீஸரின் முடிவில் ஜோதிகா பேசியுள்ள வார்த்தையால் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக உ.வாசுகி தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், '' 'நாச்சியார்' டீஸரில் வரும் கெட்ட வார்த்தைக்கு மாதர் சங்கம் என்ன செய்தது என்பது தான் இப்போது டிரெண்டிங் போல! சிம்புவின் கேவலமான பாடலைக் கண்டித்த பின் இந்தக் கேள்வி எந்த பிரச்சினை நடந்தாலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நோக்கி வீசப்படுகிறது.
கேட்பவர்கள் கேள்வியை முகநூலில் பதிவு செய்வதே மிகப் பெரும் சமூக சேவையாக நினைத்து விடுகிறார்கள். சமூகப் பணி இவ்வளவு சுலபம் என எண்ணுவதே அவர்களின் அறிவுப் பற்றாக்குறையைக் காட்டுகிறது. இந்த கேள்வியில் சிம்பு பாடலின் வக்கிரம் உட்பட கடந்த காலத்தில் மாதர் சங்கம் எதிர்த்த பலவற்றை குறித்த பொருமலே வெளிப்படுகிறது. நியாயமல்ல என்று நினைப்பதை யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அதை விடுத்து மாதர் சங்கத்தை நக்கல் செய்வது, அறிக்கை விட்டோமே என்றால் ஏன் இயக்கம் நடத்தவில்லை என்பது, இயக்கம் நடத்தினோம் என்றால் மீடியாவில் வரவில்லை, பொய் சொல்கிறீர்கள் என்பது, போட்டோவை போட்டால் ஏன் போலீஸ் புகார் கொடுக்கவில்லை என கேட்பது........ இப்படி பட்டியல் நீள்கிறது. எனவே அநீதியை எதிர்ப்பது என்ற அக்கறை 'மாதர் சங்கம் எங்கே போனது?' என்ற கேள்வியில் வெளிப்படவில்லை.
நிற்க.... நாச்சியார் டீஸர் பிரச்சினைக்கு வருவோம். தே.. வார்த்தை பெண்ணை இழிவுபடுத்தும் வார்த்தை. இதன் பூர்வாங்கத்தை பார்த்தால் ஆணின் கட்டற்ற பாலியல் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு குலம். அந்த வழக்கம் மண்மூடி போவதற்கு பல போராட்டங்கள் நடந்துள்ளன. எனவே யதார்த்தம் என்கிற பேரில் இதை ஏற்க முடியாது. குறைந்தபட்சம் முழு படத்தை பார்க்கும் போதாவது எந்தப் பின்புலத்தில் காட்சி அமைகிறது என்று புரிந்து கொள்ள முடியும். டீஸரில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? ஜோதிகாவை சொல்ல வைத்து ஷாக் ஏற்படுத்தி விளம்பரம் தேடும் ஏற்பாடு தவிர வேறென்ன? யதார்த்தத்தை காட்டுவது மட்டுமல்ல, மாற்றுவதும் சினிமாவின் நோக்கமாக இருக்க வேண்டும்'' என்று வாசுகி தெரிவித்துள்ளார்.