உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரிக்கை: மதுரை வழக்கறிஞரின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க உத்தரவு

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரிக்கை: மதுரை வழக்கறிஞரின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக்கோரி பிப்.28 முதல் சென்னையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள மதுரை வழக்கறிஞர் பகவத்சிங்குக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. பகவத்சிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென்பது நீண்டகால கோரிக்கையாக கிடப்பில் இருந்து வருகிறது.

எனவே இந்த கோரிக்கையை நிறைவேற்றித்தரக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மெரினா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகில் கடந்த டிச.20 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டு போலீஸாரிடம் அனுமதி கோரினேன். ஆனால் அதற்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் வரை காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டே மனுதாரருக்கு அனுமதி மறுத்ததாகவும், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், இந்த போராட்டத்தில் தன்னுடன் விருப்பம் உள்ளவர்கள் குறைந்த எண்ணிக்கையில் பங்கேற்க உள்ளதாகவும், தங்களது இந்த போராட்டத்தால் எந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, “மனுதாரரின் கோரிக்கையில் எந்தவொரு சட்டவிரோதமும் இல்லை என்பதால் வழக்கமான நிபந்தனைகளுடன் பிப்.28 முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள மனுதாரருக்கு போலீஸார் அனுமதி வழங்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in