Published : 09 Feb 2018 07:36 AM
Last Updated : 09 Feb 2018 07:36 AM

தலைமன்னார் அருகே இலங்கை கடற்படையினரால்7 தமிழக மீனவர் சிறைபிடிப்பு

தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த விசைப்படகை கைப்பற்றி அதில் இருந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை சிறைபிடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 600 விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அந்நாட்டு கடற் பகுதிக்குள் மீன்பிடிக்கக் கூடாது என ஒலி பெருக்கிகள் மூலம் எச்சரித்தனர்.

அதைத்தொடர்ந்து, அங்கிருந்த ஒரு விசைப்படகை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அதில் இருந்த நாகராஜ்(45), ரவி வீரபாண்டியன்(45), கார்த்தி(22), ஆறுமுகம்(50), நாகராஜ்(50), எமிரேட்ஸ்(35), வரகுணபாண்டியன்(27) ஆகிய 7 மீனவர்களை சிறைபிடித்தனர்.

7 பேரும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு மன்னார் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த ஜன.24-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மீனவர்களின் காவல் நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர்களது காவலை வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து ஊர்க்காவல்துறை நீதிமன்ற உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x