

சென்னை: மின்வாரியத்தை மூன்றாக பிரித்து நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்த வரைவை தொழிற்சங்கங்களிடம் மின்வாரிய அதிகாரிகள் நேற்று வழங்கினர். கடந்த 2010-ம் ஆண்டு மின்வாரியத்தை மூன்றாக பிரித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை மின்வாரிய தலைமையகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து வாரிய பகிர்மானப் பிரிவு இயக்குநர் மணிவண்ணன், செயலர் தேவராஜ் ஆகியோர் வழங்கினர். இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் கூறியதாவது:
கடந்த 2010-ம் ஆண்டு அரசாணையின்படி மின்வாரியம் 3 ஆக பிரிக்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் பிறப்பித்த அரசாணைகளின்படி, தற்போது 5 நிறுவனங்களாக நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நிறுவனங்கள் குறித்து முத்தரப்பு ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் தற்போது பணியில் இருப்போருக்கு ஓய்வூதியம், பணப்பலன் வழங்குவது தொடர்பான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. மூலதனநிதியம் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை.
இவ்வாறு அரசுபொறுப்பின் கீழ் நிர்வாகம் செயல்படுவதற்கான எந்த ஒரு உத்தரவாதமும் அளிக்கப்படாததால் திருப்திகரமாக இல்லை. தொழிற்சங் கங்கள் கூடி ஆலோசித்து கருத்து தெரிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.