Published : 16 Feb 2018 09:19 AM
Last Updated : 16 Feb 2018 09:19 AM

கொள்கைகள் தெரிந்தபிறகே ரஜினி, கமலுக்கு ஆதரவு: நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தகவல்

அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனின் அரசியல் கொள்கைகள் குறித்து தெரிந்தபிறகே ஆதரவு தெரிவிப்பது குறித்து முடிவெடுப்போம் என்று தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்கத்தில், நாடகக் கலைஞர்களை நேற்று சந்தித்த அவர் பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது:

அழிந்துவரும் பாரம்பரிய நாடகக் கலைகளை புதுப்பிப்பதற்கு நடிகர் சங்கம் முயற்சி எடுத்து வருகிறது. நாடக நடிகர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தியதுடன், வயது வரம்பை 60-ஆக குறைத்துள்ளோம். நாங்கள் பொறுப்பில் இருந்தால்தான் நடிகர் சங்க கட்டிட கட்டுமானப் பணி நிறைவுறும். எனவே, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி மீண்டும் போட்டியிடும்.

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே விஷாலின் எண்ணம். தேர்தலில் போட்டியிடும்போது சாமானியர்களுக்கு எத்தகைய இடையூறுகள் வரும் என்பதை ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலுக்கு ஏற்பட்ட சம்பவம் மூலம் தெரிந்துகொண்டோம். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது மக்களுக்கு சேவையாற்றத்தானே தவிர, பணம் சம்பாதிக்க அல்ல. அவர்களின் அரசியல் கொள்கைகளை தெரிந்துகொண்ட பிறகே நாங்கள் ஆதரவு தெரிவிப்பது குறித்து முடிவெடுப்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x