குரங்கனி தீ விபத்தில் சிக்கி 23 பேர் இறந்த சம்பவம் - பெல்ஜியம் நாட்டவருக்கு எதிரான வழக்கு ரத்து

குரங்கனி தீ விபத்தில் சிக்கி 23 பேர் இறந்த சம்பவம் - பெல்ஜியம் நாட்டவருக்கு எதிரான வழக்கு ரத்து
Updated on
1 min read

புதுடெல்லி: குரங்கனி தீ விபத்தில் சிக்கி 23 பேர் இறந்த சம்பவத்தில் பெல்ஜியம் நாட்டவருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கனி வனப்பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் இருந்து 24 பேர் கொண்ட ஒரு குழுவும், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர் கொண்ட ஒரு குழுவும் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டனர். குரங்கனி - கொழுக்கு மலை வனப் பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயில் சிக்கி இதில் 23 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து வனத்துறையின் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சியை ஒருங்கிணைத்ததாகக் கூறி சென்னை பாலவாக்கத்தில் டிரக்கிங் கிளப்பை நடத்தி வரும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் கெய்ட் என்பவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

வனப்பகுதியில் நடந்த காட்டுத் தீ விபத்து சம்பவத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இந்த விபத்து நடந்த போது தான் பெல்ஜியத்தில் இருந்ததாகவும், தனது கிளப்பைச் சேர்ந்தவர்கள் இந்த மலையேற்றப் பயிற்சியை வனத்துறையின் அனுமதி பெற்றே நடத்தியதாகவும், அதற்கான அனுமதி கடிதம் மற்றும் வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்வதற்கான கட்டண ரசீது ஆகியவையும் தீ விபத்தில் இறந்தவர்களுடன் எரிந்து விட்டது என்றும், எனவே தனக்கு எதிராக போலீஸார் பதிந்துள்ள வழக்கையும், போடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விசாரணையையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி பீட்டர் வான் கெய்ட் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பீட்டரின்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து பீட்டர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஏ.ஜி.மாஸி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், காட்டுத்தீயில் 23 பேர் இறந்த சம்பவம் தற்செயலாக, இயற்கையின் தாண்டவத்தால் நடந்த சம்பவம். மனுதாரரான பீட்டர் வான் கெய்ட் மீதுபதியப்பட்டுள்ள இபிகோ பிரிவுகள் 304 ஏ ( கவனக் குறைவு காரணமாக மரணம் விளைவித்தல் ) மற்றும் 338 ( மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து அல்லது தனிப்பட்ட நபர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்தல் ) ஆகியவை பொருந்தாது.

தற்செயலாக நடந்த இந்த உயிரிழப்பு சம்பவத்துக்கு, டிரக்கிங் கிளப்பை நடத்தி வரும் மனுதாரரின் அலட்சியமே காரணம் எனக் கூறி விட முடியாது. மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கும் இப்படி ஒரு துயரச் சம்பவம் நிகழும் என தெரியாது. எனவே பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மனுதாரருக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்கு மற்றும் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட வழக்கு விசாரணை நடை முறைகளை ரத்து செய்கிறோம் என உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in