Published : 03 Feb 2024 09:23 AM
Last Updated : 03 Feb 2024 09:23 AM
சென்னை: தமிழகத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட 219 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 9 மாதங்களில் விதிமீறல்களில் ஈடுபட்ட 219 மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களின் மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 381 மருந்து விற்பனையாளர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த மொத்த விற்பனை நிறுவனங்களின் 21 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை, விநியோகம் செய்த 9 மருந்து விற்பனை மையத்தின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இனி வருங்காலங்களிலும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை, விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT