Published : 26 Feb 2018 07:13 AM
Last Updated : 26 Feb 2018 07:13 AM

தென் கடலோரத்தில் சில நாட்களுக்கு மழை பெய்யும்

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் கடலோர தமிழக பகுதிகளில் சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு இலங்கை கடலோரப் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்துவிட்டது. அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவியது. இது தற்போதும் அதே இடத்தில் நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தென் கடலோர தமிழக பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர தமிழக பகுதியில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிப்பொழிவு இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 32, குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி, அதிகபட்சமாக மதுரை, பாளையங்கோட்டை, சேலம் ஆகிய இடங்களில் தலா 34 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x