Published : 09 Feb 2018 07:38 AM
Last Updated : 09 Feb 2018 07:38 AM
புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒடிசாவைச் சேர்ந்த சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்து, பாலியல் சித்ரவதை செய்துவந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு தொண்டுநிறுவன தன்னார்வலர் ஒருவர் சமீபத்தில் புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், புதுச்சேரி கிருஷ்ணா நகர் 2-வது குறுக்குத் தெருவில் வசித்துவரும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தியாரி காக்னர்(60) என்பவர், 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
மனுவை பெற்ற ஆளுநர், அதன் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவிட்டார்.
மேலும், இந்தப் புகார் மனு புதுச்சேரி அரசின் குழந்தைகள் பாதுகாப்புக் குழு தலைவி வித்யா ராம்குமாருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் அவரது தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட இல்லத் தில் திடீரென சோதனை நடத்தி சிறுமியிடம் விசாரித்தனர்.
அப்போது சிறுமியை முதியவர் பாலியல் தொல்லை செய்தது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காக்னர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்பதால் அவர் மீதான கைது நடவடிக்கை குறித்து அரசு, தலைமை செயலர், பிரான்ஸ் தூதரகம் உள்ளிட்டவற்றுக்கு தகவல் தெரிவித்த போலீஸார், சிறார் பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் அவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் சிறுமியை நேற்று புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.
புதுச்சேரியில் தங்கி இருந்து சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வரும் காக்னர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசா சென்றார். அப்போது அங்கு வறுமையில் தவித்து வந்த சிறுமியின் குடும்பத்தாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
அவர்களின் வறுமைக்கு உதவும் வகையில் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரை புதுச்சேரி அழைத்து வந்த அவர், தான் வசித்து வந்த வீட்டிலேயே அவர்களை தங்க வைத்துள்ளார்.
பின்னர் அவர், அந்தச் சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT