

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63.246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ),கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4 -வது வழித்தடம் (26.1 கி.மீ.), மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் (44.6 கி.மீ.) ஆகிய வழிதடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கு பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில், முக்கியவழித்தடமாக திகழும் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது. இந்தவழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன.
இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிக்கு மொத்தம் 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்த முடிவு செய்து, தற்போது 2 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான `பிளமிங்கோ' கடந்தஆண்டு செப்.1-ம் தேதி பணியைத் தொடங்கியது. 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘கழுகு’ தனது பணியை கடந்த 18-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் தியாகராய நகர் பனகல் பூங்காவில் `பெலிகன்' என்னும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை பயன்படுத்தி பூமியில் இருந்து 18 மீட்டர்ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கும்பணி நேற்று தொடங்கியது. பனகல்பூங்காவில் இருந்து கோடம்பாக்கம்வரை இந்தப் பணி நடைபெறும்.
இந்நிலையில், இந்தப்பணியின் தொடக்க நிகழ்ச்சி சென்னை தியாகராயநகர் பனகல் பூங்காவில் நேற்றுநடைபெற்றது. சுரங்கம் தோண்டும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் தி.அர்ச்சுனன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் சுரங்கப்பாதை பணிக்காக23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இந்த 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களில், 19 இயந்திரங்கள் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
பனகல் பூங்காவில் சுரங்கம்தோண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நிறைய சவால்கள் உள்ளன. பனகல் பூங்காவில் களிமண் அதிக அளவில் உள்ளது.
சுரங்கம் பாதை அமைக்கும் இடங்களை சுற்றி பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றுக்கு எவ்வித சேதம் இல்லாமல் பாதுகாப்பாக சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை இயக்க வேண்டும். இந்த பணி தீவிரமாக கண்காணிக்கப்படும். இந்த இயந்திரம் கோடம்பாக்கத்தை அடையும்போது, 4 ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும்.
இதைத்தொடர்ந்து, பவர்ஹவுஸை அடைகிறது. பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம், பவர்ஹவுஸ் வரை 2 கி.மீ. ஆகும். இந்த தொலைவை சுரங்கம் தோண்டும் இந்திரம் இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அடைந்துவிடும்.
இங்கு அடுத்த ஒன்றரை மாதத்தில் `பிகாக்' என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியைத் தொடங்க உள்ளது. 2 இயந்திரங்களும் இந்தஆண்டு இறுதிக்குள் கோடம்பாக்கம் பவர்ஹவுரை அடைந்துவிடும்.
கோடம்பாக்கம் ரயில் தண்டவாளங்கள் கீழ் சுரங்கம் தோண்டும் இயந்திரம் செல்லும்போது, தண்டவாள பாராமீட்டரை அளந்துகொண்டு இருப்போம். பாரமீட்டர் அளவில் ஏதாவது மாற்றம் இருந்தால், ரயில் வேகத்தை கட்டுப்படுத்த ரயில்வேக்கு தகவல் கொடுத்து விடுவோம். இந்த பணி தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் பேசி அனுமதி வாங்கி இருக்கிறோம். அவர்கள் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர். அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணிகள் நடக்கும்.
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் திருமயிலையில் இரட்டை பாதை குறுக்கே வருகிறது. இங்கு இரட்டை நிலையங்கள் அமைய உள்ளன. இந்நிலையம்2028-ம் ஆண்டு ஜூன் மாதம் தயாராகும். ஆனால், இதில் 4-வது வழித்தடத்தை 2027-ம் ஆண்டு இறுதியில் தயார் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஒட்டுமொத்தமாக, பணிகள் 2028-ம் ஆண்டில் முடிந்துவிடும்.
அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி 3 மாதத்தில் அடையாறு ஆற்றை கடந்துவிடும். மெட்ரோ ரயில் பணியின்போது, சேதமடைந்த சாலைகளை மேம்படுத்தி கொடுக்கிறோம்.
கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பனகல் பூங்கா வரை சுரங்கப்பாதை பணி உட்பட அனைத்து பணிகளும் வரும் 2026-ம் ஆண்டு ஜூனில் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.