நலவாரிய உறுப்பினர்களின் தரவுகள் மாயம்: நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

நலவாரியங்களில் பதிவு செய்த 70 லட்சம் தொழிலாளர்களின் தகவல்கள் காணாமல் போன விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: ம.பிரபு
நலவாரியங்களில் பதிவு செய்த 70 லட்சம் தொழிலாளர்களின் தகவல்கள் காணாமல் போன விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களின் தரவுகள் மாயமானது தொடர்பாக நடவடிக்கை கோரி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், தரவுகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பணப்பயன்கள் நிறுத்தப்படாது என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின்கீழ், கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் 18 அமைப்புசாரா நலவாரியங்களில் 45 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர்.

இந்நிலையில், இந்த நலவாரிய உறுப்பினர்களின் தரவுகள் அனைத்தும், கணினியில் அழிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, சென்னையில் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு, நேற்று சிஐடியு சார்பில் மாநில பொதுச் செயலாளர்ஜி.சுகுமாறன் தலைமையில், வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நலவாரிய ஆன்லைன் பதிவுகள் காணாமல் போனது குறித்து உடனே விசாரணை நடத்தி, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரிய ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்வதுடன், பணப்பயன்களை விரைவாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சர்வர் பிரச்சினை: இதையடுத்து, தொழிலாளர் நலவாரிய பிரிவு அதிகாரிகள், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், சர்வர் பிரச்சினை ஏற்பட்டது தொடர்பாகவும், தகவல்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்தும் விளக்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியுபொதுச்செயலாளர் சுகுமாறன் பேசும்போது,‘‘ தகவல்கள் காணாமல்போனது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு விசாரணைக்குழு அமைத்து, அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து தொழிலாளர் துறை அதிகாரிகள் கூறியதாவது:

உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், சர்வரில் போதிய இடத்துக்காக சில மாற்றங்களை செய்தோம். அப்போது, இந்த பிரச்சினை ஏற்பட்டது. கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா நலவாரியங்களின் உறுப்பினர்கள் அனைவரின் தரவுகளும் உள்ளன.

ஆனால், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் கையெழுத்து பதிவுகள் மட்டும் கிடைக்கவில்லை. இவற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பணப்பயன்கள் வழங்கும்போது தேவைப்படும் விவரங்களை உறுப்பினர்களிடம் பெற்றுக் கொள்வோம். உறுப்பினர்கள் புதுப்பிக்கும்போது அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in