காங்கிரஸை விமர்சித்து பேசிய விவகாரம் | அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸை விமர்சித்து பேசிய விவகாரம் | அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி
Updated on
1 min read

சென்னை: காங்கிரஸ் குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக தான் கண்டிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மாநில திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: அமைச்சர் ராஜகண்ணப்பனின் செயல்பாடுக்கான பதிலை அவரது கட்சி (திமுக) தான் சொல்ல வேண்டும். எங்களது கட்சியில் யாரேனும் இவ்வாறு செய்திருந்தால் நாங்கள் பதில் சொல்லியிருப்போம். இது கட்சியின் விதிகளுக்கு முரண்பாடானது. இப்படி பேசியிருக்க கூடாது என்று அவருடைய கட்சி (திமுக) தான் சொல்ல வேண்டும்.

சென்னையில் திமுக மட்டும்தான் போட்டியிட வேண்டுமா, காங்கிரஸ் கட்சிக்கும் பெற்று தாருங்கள் என்று என்னிடம் நிர்வாகிகள் கேட்கிறார்கள். கூட்டணியில் இது வழக்கமாக பேசப்படுவதுதான். ஒரு தொகுதியில் ஒரே கட்சி தொடர்ந்து நின்றால் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு இருக்காது. இது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். ஆட்சி அதிகாரம் மாறி மாறி வருவதில் தவறில்லை என்று நமது அரசியலமைப்பு சொல்கிறது. அதிகாரம் என்பது தொடர்ந்து இருக்கவும் கூடாது. ஒருவரே ஆட்சி செய்வது சர்வாதிகார ஆட்சியாக மாறிவிடும். எனவே ஆட்சி மாற்றங்கள் தேவை. அதிகாரத்தில் இல்லை என்றுஒருபோதும் காங்கிரஸ் கவலைபட்டது கிடையாது.

பாஜக ஒரு மதவாத கட்சி. காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சி. இந்திய எல்லைக்குள் வாழ்கிறவர்கள் அனைவருமே இந்தியர்கள் என மகாத்மா காந்தி கூறியதுதான் காங்கிரஸ் கட்சியின் லட்சியம்.

சாமி குற்றமாகும்: பிரதமர் மோடியின் ஆட்சி வீழ்ச்சிகரமான ஆட்சியாகும். கோயில் கட்டுவதால் மட்டுமே பாஜக வெற்றிபெறாது. கோயில் கட்டியவர்கள் எவரும் நல்லா இருந்ததாக வரலாறே கிடையாது. தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றால் பதவி போகும் என்கின்றனர். ராஜராஜனுக்கு அப்படிதான் பதவி போனதாக கூறப்படுகிறது. அயோத்தி கோயிலை முழுமையாக கட்டாமல் கும்பாபிஷேகம் செய்தது மிகப்பெரிய சாமி குற்றமாகும்.

அதிமுக பாஜகவை துறந்தது வரவேற்கத்தக்கது. ஆனால் காங்கிரஸ் ஏன் வரவேற்கவில்லை என்றால், அதிமுக பாஜக இடையே ஓர் கள்ள உறவு இருப்பதாக சந்தேகிக்கிறோம். ஒரு பெரிய முடிவை எடுக்கும்போது அதற்கான காரணத்தை மக்களிடம் சொல்ல வேண்டும். அதிமுக இதுவரை சொல்லவில்லை. எனவே அதிமுகவினர் நம்பத் தகுந்தவர்களாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in