

ஒட்டன்சத்திரம்: உரிமைத் தொகை வழங்குவதில் மகளிரை திமுக அரசு ஏமாற்றி விட்டது என திண்டுக்கல் சி.சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் பால சுப்பிரமணி தலைமையில் நடந்தது. மாவட்டப் பொருளாளர் பழனிவேல், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் கருப்பு சாமி, மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது: எம்ஜிஆர் தனது கடின உழைப்பால் 3 முறை தமிழகத்தின் முதல்வராகி சிறந்த ஆட்சியை நடத்தியவர். திமுக 525 பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. மகளிர் உரிமைத் தொகை பெரும்பாலான பெண்களுக்கு கொடுக்கவே இல்லை. மகளிரை திமுக அரசு ஏமாற்றிவிட்டது, என்றார்.