Published : 30 Jan 2024 06:06 AM
Last Updated : 30 Jan 2024 06:06 AM

2-வது சிறந்த அலங்கார ஊர்தியாக தேர்வான காவலர் ஊர்தி: காவல் துறை குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

பொதுமக்களுக்கான காவல் துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் இணை ஆணையர் தர்மராஜன், துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய்.

சென்னை: பொதுமக்களுக்கான காவல் துறையின் திட்டங்கள் குறித்து மாணவர்களிடம் போலீஸார் எடுத்துரைத்தனர். குடியரசு தின விழாவின்போது அரசுத் துறைகளின் நலத்திட்டங்கள், சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில், தமிழ்நாடு காவல்அலங்கார ஊர்தி, சிறந்த அலங்கார ஊர்திக்கான 2-ம் பரிசை பெற்றது. இந்த அலங்கார ஊர்தி, சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதை நேற்று 250 மாணவ, மாணவிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் ஜி.தர்மராஜன், திருவல்லிக்கேணி துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர், தமிழ்நாடு காவல் அலங்கார ஊர்தியில் இடம்பெற்றிருந்த, ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு, பருந்து செயலி (குற்றவாளிகளின் விவரங்களை அறியும் செயலி), நிவாரணம் செயலி (பொதுமக்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் செயலி), மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள `பந்தம்' திட்டம், எப்ஆர்எஸ் செயலி (முகத்தைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் செயலி), வீரா வாகனம் (சாலை விபத்து மீட்பு மற்றும் விடுவிப்பு வாகனம்) மற்றும் தமிழ்நாடு காவல் துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்ட 50-வது ஆண்டு ஆகியவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர்.

காவல் அருங்காட்சியகம்: பின்னர் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் சுற்றிக் காண்பிக்கப்பட்டு, காவல் துறையின் ஆயுதங்கள், சீருடை, பணிகள், சிறப்புகள், சாதனைகள், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x