மாநகரப் பேருந்தில் நவீன கையடக்க மின்னணு டிக்கெட் கருவி: சோதனை முயற்சி தொடக்கம்

மாநகரப் பேருந்தில் நவீன கையடக்க மின்னணு டிக்கெட் கருவி: சோதனை முயற்சி தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்தில் அதிநவீன கையடக்க மின்னணு டிக்கெட் கருவி 2 மாதங்களில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள நிலையில், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பணிமனைகளில் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் 1.55 கோடிக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். இவர்களுக்கு பயணச் சீட்டு வழங்கும் வகையில், மின்னணு பயணச்சீட்டு கருவிகள் 16 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமல்படுத்தப்பட்டன.

இதன் பின்னர், 2011-ம் ஆண்டில் அதி நவீன பயணச்சீட்டு கருவிகள் மூலம் பயணச்சீட்டு வழங்க அரசு திட்டமிட்டது. இத்திட்டம் மத்திய அரசின் நிதியுதவியுடன் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு, சுமார் 30 ஆயிரம் கருவிகள் ஒப்பந்த அடிப்படையில் வாங்கப்பட்டன.

எனினும், புதிதாக வாங்கப்பட்ட கருவிகளில் பயணச்சீட்டு கொடுக்கும் நேரம் 4 நொடிகள் கூடுதலாவது, 8 மணி நேரம் மட்டுமே பேட்டரி நீடிப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இவை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, சரி செய்யப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் படிப்படியாக கருவிகள் அனைத்தும் திருப்பி வாங்கப்பட்டு, வழக்கமான பயணச்சீட்டு நடைமுறையே தற்போது பெரும்பாலான பேருந்துகளில் அமலில் உள்ளது.

இந்நிலையில் மீண்டும் கருவிமூலம் பயணச்சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதையொட்டி, என்சிஎம்சி எனப்படும் தேசிய பொது போக்குவரத்து அட்டையை பிரபலப்படுத்தும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு 38 ஆயிரம் கருவிகள் வரை வழங்க தயாராக உள்ளன.

இதன் தொடர்ச்சியாக, குரோம்பேட்டை, தாம்பரம், உள்ளிட்ட பணிமனைகளில் சோதனை அடிப்படையில் பயணச்சீட்டு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் யுபிஐ, என்சிஎம்சி, கிரெடிட்கார்டு உள்ளிட்ட வகைகளில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி இடம் பெற்றுள்ளது. படிப்படியாக பிற பணிமனைகள், போக்குவரத்து கழகங்களுக்கு கருவிகளை வழங்கி திட்டத்தை விரிவுபடுத்த போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், என்சிஎம்சி அட்டை மூலம் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள், மாநகர பேருந்துகளில் பயணிப்பதற்கான திட்டத்தை ஒருங்கிணைக்கும் பணிகளும் வேகமெடுக்கும் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in