

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சியில் ஆணையராக பணிபுரிந்து வந்தவர் குமாரி. இவர் கடந்த 11-ம் தேதி சென்னை பெருங்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் முனுசாமி என்பவரிடம் அவரது நிலத்தை வரைமுறைப்படுத்த ரூ.24 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அப்போது அவர் கூறிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் குமாரியை கைது செய்தனர்.
அவர் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 3 லாக்கர் சாவிகளை பறிமுதல் செய்தனர். இவை செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி ஜெயஸ்ரீயிடம் அனுமதி பெற்று வங்கி லாக்கரில் சோதனை நடத்தினர். அப்போது ஆணையர் குமாரி, அவரது கணவர் யுகமன்னன் ஆகியோர் கூட்டாக கணக்கு வைத்திருந்த வங்கி லாக்கர்களில் சோதனை நடத்தினர்.
அப்போது சேலையூரில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் இருந்து ரூ.8 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மற்றொரு தனியார் வங்கி லாக்கரில் இருந்து ரூ.20 லட்சமும், அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் லாக்கரில் இருந்து ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.33 லட்சத்தை கைப்பற்றினர்.
மேலும் இந்த லாக்கரில் இருந்து 17 பவுன் நகைகளும் கைப்பற்றப்பட்டன. ரூ.33 லட்சம் கணக்கில் வராத பணம் என்றும், நகை தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.