Published : 22 Feb 2018 09:46 AM
Last Updated : 22 Feb 2018 09:46 AM

கடலில் தத்தளிக்கும் மீனவருக்கு கட்டையைப்போல கமல் உதவுவார்: விசைப்படகு மீனவப் பிரதிநிதி நம்பிக்கை

கடலில் தத்தளிக்கும் மீனவருக்கு ஒரு கட்டையைப் போல கமல் உதவுவார் என ராமேசுவரத்தில் கமல் அரசியல் பயணத்தை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது விசைப்படகு மீனவப் பிரதிநிதி போஸ் தெரிவித்தார்.

ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே தங்கும் விடுதியில் கமல் அரசியல் பயணத்தை முன்னிட்டு புதன்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கமல் ராமேசுவரம் விசைப்படகு மீனவப் பிரதிநிதிகளின் குறைகளை கேட்டறிந்தார். இதில் மீனவர் சங்கப் பிரதிநிதி போஸ் பேசியதாவது, மீனவர்களை அனைத்து அரசுகளும் புறக்கணித்துவிட்டன. எந்த நாட்டிலும் இல்லாத வகையில், இலங்கையில் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறையும் ரூ. 2 கோடி முதல் ரூ. 17.5 கோடி வரை அபராதம் விதித்து இலங்கை அரசு சர்வாதிகாரம் செய்து வருகிறது. இதனை மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது. தேர்தலுக்கு முன்பாக சுஷ்மா சுவராஜும், பிரதமர் மோடியும் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்களித்திருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, டெல்லியில் சந்திக்க சென்றபோது, இலங்கை எல்லையில் மீன் பிடிக்காதீர். மடியேந்தி பிச்சை கேட்கிறேன் என்று எங்களிடம் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். மீனவர்களின் பிரச்சினைகளை கமல்ஹாசன் கையில் எடுத்துள்ளதால் எங்கள் பிரச்சினை உலக அளவில் பேசப்படும். கடலில் தத்தளிக்கும் மீனவருக்கு ஒரு கட்டையை போல, கமல் உதவுவார் என எதிர்பார்க்கிறோம். மீனவர்களைப் பொறுத்தவரை எந்த கட்சியிலும் சேரவில்லை. எங்களுக்கு கமல் நல்லது செய்தால் இணைந்து செயல்படுவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x