சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு கோகுல இந்திரா உட்பட 2 பேரை தயார்படுத்தும் அதிமுக

கோகுல இந்திரா, கருணாகரன்
கோகுல இந்திரா, கருணாகரன்
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அல்லது முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன் மகன் கருணாகரனை நிறுத்த அதிமுக தலைமை அவர்களைத் தயார்படுத்தி வருகிறது.

மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ளது. இதனால், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள், தங்களது கூட்டணிக்கு வரும் என அதிமுக தலைமை எதிர்பார்த்தது. ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில் பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் சில கட்சிகளின் நிலையில் மாற்றம் ஏற்படலாம். எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வராவிட்டால் அதிமுக தனித்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்வதில் சிரமம் ஏற்படும். இதனால், தற்போதே 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. ஆனால், கூட்டணி பலம் இல்லை, தேர்தலில் நிற்க பல கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும் என்பதால் அதிமுக சார்பில் போட்டியிட பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

எனினும் செலவழிக்கக் கூடிய செல்வாக்கு மிக்க நபர்களை நிறுத்த அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை மூத்த முன்னாள் அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரனின் மகன் கருணாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளர் இளங்கோ, ஒன்றியச் செயலாளர்கள் சேவியர்தாஸ், கோபி போன்றோர் விரும்புகின்றனர்.

எனினும், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அமைச்சர் பாஸ்கரனின் மகன் கருணாகரன் ஆகியோரை தவிர மற்றவர்களுக்கு தேர்தல் செலவு செய்வதில் கட்சித் தலைமை உதவ வேண்டி இருக்கும். இதனால் கோகுல இந்திரா அல்லது கருணாகரனை தயார்ப்படுத்த கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக இருவரிடமும் தலைமை பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் வருவதால், ஒரு தொகுதிக்கு ரூ.20 கோடி முதல் ரூ.40 கோடி வரை தேவைப்படும். இந்த முறை வேட்பாளர்களுக்கு பெரிய அளவில் உதவ கட்சித் தலைமை தயாராக இல்லை. மேலும், போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் தேர்தலில் போட்டியிடத் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், செலவழிக்கக் கூடிய வலிமை உள்ளவர்களை நிறுத்த, அவர்களிடம் கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in