Published : 17 Aug 2014 02:15 PM
Last Updated : 17 Aug 2014 02:15 PM

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழுக்கு துரோகம்: ராமதாஸ் சாடல்

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழாசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றன என்றும், தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பு, இப்போது தான் நியமனம் செய்யப்படும் கட்டத்திற்கு வந்திருக்கிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட்ட பட்டியலின்படி, தமிழகத்தில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை தான் கவலையளிக்கிறது.

அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் வெறும் 772 பேர் மட்டுமே தமிழாசிரியர்கள் ஆவர். ஆங்கிலப் பாடத்திற்கு 2822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது இப்போது நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வெறும் 7.21% மட்டுமே. ஆனால், வரலாற்று ஆசிரியர்களின் எண்ணிக்கையோ 33.57% ஆகும். அதேபோல்,தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் 26.37% ஆங்கிலப்பட்டம் பெற்றவர்கள் ஆவர். அறிவியல் பாடங்களுக்கும், ஆங்கிலப்பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தாய்மொழியாம் தமிழ் பொழிக்கு மட்டும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களில் மூன்றில் இரு பங்கினர் பதவி உயர்வின் மூலமாகவும், ஒரு பங்கினர் மட்டும் நேரடியாகவும் நியமிக்கப்படுவதாக தமிழக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்குமானால், சுமார் 1550 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி தமிழாசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாக தெரிய வில்லை.

ஆறு முதல் 8 வரையிலான வகுப்புகளில் தமிழ் பாடம் நடத்த போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மற்ற பாடங்களின் ஆசிரியர்களே தமிழ் பாடத்தையும் நடத்துகின்றனர். இலக்கிய மற்றும் இலக்கண வளம் கொண்ட தமிழை மற்ற ஆசிரியர்களால் அவ்வளவு எளிதாக நடத்தி விடமுடியாது.

அதுமட்டுமின்றி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு தமிழாசிரியர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஒரு தமிழாசிரியர் என இரு தமிழாசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ஒரே ஒரு தமிழாசிரியரை மட்டும் நியமிக்கும் நடைமுறையும் உள்ளது. இதன்மூலம் தமிழாசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யும் இப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் நியமனத்திற்கு தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அவர்களில் வெறும் 772 பேருக்கு மட்டுமே இப்போது வேலை வழங்கப்படுகிறது. இதேபோல், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதாக வைத்துக் கொண்டால், இதுவரை தேர்ச்சி பெற்ற தமிழ் ஆசிரியர்களுக்கு வேலை வழங்கவே இன்னும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகி விடும். அதற்குள் இவர்களில் பலர் ஓய்வு பெறும் வயதை எட்டியிருப்பார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகும் பணி கிடைப்பது குதிரைக் கொம்பு என்றால் தமிழ் படிக்கும் ஆர்வம் குறைந்து விடும்.

தமிழ் பட்டதாரி ஆசிரியர்களை அதிக அளவில் நியமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் போதிலும், ஆசிரியர் நியமனத்தில் அரசு கடைபிடிக்கும் தவறான கொள்கையால் தான் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை குறைகிறது. ஆசிரியர் நியமன வரிசையில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல்ஆகிய பாடங்களுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் தான் தமிழ் பாடம் உள்ளது.

40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்படும் நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான வகுப்புகளில் 120 மாணவர்கள் வரை இருந்தால் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே தலா ஓர் ஆசிரியர் நியமிக்கப்படுவர். 120 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே தமிழாசிரியர் நியமிக்கப் படுவர். இதனால் 120க்கும் குறைவான மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் தமிழாசிரியர்களே இல்லை என்ற நிலை காணப்படுகிறது. இந்த நிலையை மாற்றி ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழை முதலிடத்திற்கு கொண்டு வந்தால் அனைத்து பள்ளிகளிலும் ஒரு தமிழாசிரியர் கட்டாயமாக நியமிக்கப் படுவது உறுதி செய்யப்படும். இதனால் தமிழாசிரியர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் தருவது தான் சரியானதாக இருக்கும். எனவே பட்டதாரி ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழுக்கு முதலிடம் தருவதுடன், மாணவர்கள் ஆசிரியர் விகிதத்தை 30:1 ஆக மாற்ற வேண்டும். இதன்மூலம் தமிழாசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x